மணிரத்னத்தின் புதிய படம்... கார்த்திக் மகன் ஹீரோ!

ராவணன் படத்தை தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக எடுக்கவிருந்தார் மணிரத்னம். விஜய், ஆர்யா, மகேஷ்பாபு ஆகியோர் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்புக்கு லொக்கேஷன்கள் கூட பார்க்கப்பட்டுவிட்டன.
ஆனால் அந்தப் படத்தின் பிரமாண்டம், செலவு போன்றவற்றை மனதில் வைத்து இப்போதைக்கு படத்தை தள்ளி வைத்துள்ளார்.
இந்த நிலையில் மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தப் போகிறாராம் மணிரத்னம். நாயகி உள்பட முக்கிய பாத்திரங்களுக்கு புதுமுகங்களையே ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக்கும் கவுரவ வேடத்தில் தோன்றுவார் என்கிறார்கள்.
இந்தப் படத்துக்காக லொக்கேஷன் கூட பார்த்தாகிவிட்டதாம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தை தமிழில் மட்டுமே எடுக்கிறார் மணிரத்னம். 2002 ம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக தமிழில் மட்டுமே அவர் இயக்கும் படம் இதுதான். கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு அவர் எடுத்த படங்கள் அனைத்தும் தமிழ் - இந்தியில் எடுக்கப்பட்டன. இதனால் இயல்புத்தன்மை குறைந்து மொழிமாற்றுப் பட பாணியில் அவை அமைந்துவிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்தப் புதிய முடிவை மேற்கொண்டுள்ளாராம் மணிரத்னம்.


Click it and Unblock the Notifications











