வரலட்சுமி சரத்குமாரின் மம்மா மியா நாளை அரங்கேற்றம்

இது நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியாகும். வரலட்சுமி சரத்குமார் தயாரிக்க மித்ரன் தேவநேசன் இயக்க, டிம்மோத்தி மதுகர் இசையமைக்க உருவாகியுள்ளது மம்மா மியா.
கிரேக் தீவான காலிகோஸில் வசிக்கும் டோனா மற்றும் அவரது மகள் சோபி குறித்த கதைதான் மம்மா மியா. சோபிக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. இந்த நிலையில், தனது தந்தை யார் என்பதை அறிய ஆவலாக உள்ளாள் சோபி. இதையடுத்து தனது தந்தையாக இருக்கக் கூடியவர்கள் என கருதும் 3 பேருக்கு அழைப்பு விடுக்கிறாள். அதன் பிறகு ஏற்படும் குழப்பம்தான் கதை.
நிறைய காதல், நிறைய உணர்வுகள் என கலவையான நிகழ்ச்சிதான் மம்மா மியா.
வெஸ்ட் என்ட் மியூசிக்கலின் இந்த இசை, நடன நிகழ்ச்சியை அப்படியே அதன் பெயரில் இந்தியமயமாக்கி தருகிறார்கள் வரலட்சுமி மற்றும் குழுவினர்.
இதுகுறித்து இயக்குநர் மித்ரன் தேவனேசன் கூறுகையில், எல்லாம் சரத்குமார் சார் மூலம் ஆரம்பித்தது. மம்மா மியாவைப் பார்த்து அசந்து போன அவர் அதை இந்திய வடிவத்தில் தர முடியுமா என்று ஜெப்ரி வார்டனை அணுகினார். இதையடுத்து வரலட்சுமியும் களத்தி்ல் இறங்கினார். இருவரும் இணைந்து இதற்காக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதும் மம்மா மியா உருவாக ஆரம்பித்தது என்றார்.
இந்த இசை, நடன நாடகத்தில் ஸ்வப்னா ஆப்ரகாம் டோனா கேரக்டரில் நடிக்கிறார். 3 தந்தைகளில் ஒருவராக அர்ஜூன் தாமஸ் நடிக்கிறார். கவிதை சோபி கேரக்டரில் வருகிறார்.
ஆளுக்கு ஒரு பாடலில் ஜெப்ரியும், வரலட்சுமியும் நடனமாடவுள்ளனர்.
கண்ணுக்கும், காதுக்கும் செமத்தியான விருந்தாக கருதப்படும் மம்மா மியா நாளையும், நாளை மறுநாளும் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும்.
நாளை இரவு 7 மணிக்கும், ஜூலை 5ம் தேதி மாலை 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கும் மம்மா மியாவை ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











