எஸ்.ஜானகிக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருது!

அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய, குறிப்பாக தமிழ் மனங்களில் ரீங்காரமிடும் பெயர் பி.சுசீலா. அவர் திரை உலகில் பாட வந்து இந்த ஆண்டுடன் 57 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
தற்போது, பி.சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இசைத் துறையில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியும் செய்ய உள்ளார். மேலும், இசைத்துறைக்கென தனி நூலகம் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து பாடகி பி.சுசீலா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
திரை இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பி.சுசீலா தேசிய விருது வழங்க உள்ளோம். முதல் ஆண்டுக்கான விருது, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பாடி சிறப்பு பெற்ற எஸ்.ஜானகிக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது எனது பிறந்த நாளான நவம்பர் 13-ந் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். அத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்குகிறோம்.
தேசிய அளவில் இசை துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான தேர்வுக்குழுவில், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தலைவராக இருப்பார். உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, நடிகை ஜமுனா, பாடகி ராவ் பாலசரஸ்வதி தேவி ஆகியோர் இருப்பார்கள். விருது வழங்கும் விழாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுகிறார், என்றார் சுசீலா.
பேட்டியின்போது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, பி.சுசீலா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சஞ்சய் கிஷோர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Click it and Unblock the Notifications











