twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்-தயாரிப்பாளர் பாலாஜியின் உடல் தகனம் - திரையுலகம் அஞ்சலி

    By Staff
    |

    Jayalalitha pays tribute to K Balaji
    சென்னையில் நேற்று மரணமடைந்த நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

    பிரபல நடிகரும், பட அதிபருமான கே.பாலாஜி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

    'படித்தால் மட்டும் போதுமா', 'விடிவெள்ளி', பலே பாண்டியா' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர்.

    'ராஜா',எங்கிருந்தோ வந்தாள்', 'நீதி', 'பில்லா', 'தீ', 'சட்டம்' சமீபத்தில் வெளியான 'கிரீடம்' உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார்.

    கே.பாலாஜிக்கு 10 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அவருக்கு, 'ஆபரேஷன்' மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த 10 வருடங்களாக 'டயாலிசிஸ்' சிகிச்சைப் பெற்று வந்தார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கே.பாலாஜியின் உடல்நிலை மோசமானது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு, கே.பாலாஜி மரணம் அடைந்தார். அவருடைய உடல், சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    ஜெயலலிதா அஞ்சலி

    ஏராளமான நடிகர்-நடிகைகளும், திரையுலக பிரமுகர்களும் கே.பாலாஜியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

    தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவையில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கே.பாலாஜியின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    நடிகர்கள் சத்யராஜ், அஜீத்-ஷாலினி மற்றும் திரளான திரைப் பிரபலங்கள் திரண்டு வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை பாலாஜியின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

    தயாரிப்பாறர் ஏவி.எம். சரவணன், இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், சித்ரா லட்சுமணன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், ஜெயம் ரவி, பாண்டியராஜன், ராதாரவி, நடிகைகள் கே.ஆர்.விஜயா, மனோரமா, சரண்யா, சுகுமாரி ஆகியோரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சிவாஜி கணேசனின் புதல்வர்களான ராம்குமார், நடிகர் பிரபு ஆகிய இருவரும் குடும்பத்துடன் வந்து கே.பாலாஜியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜிக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இறுதி சடங்குகளுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கே.பாலாஜியின் உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக பெசன்ட்நகர் மின்சார மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாலை 3 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது.

    கே.பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள்.

    சுசித்ராவின் கணவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவாஜியின் நண்பர்...

    கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இளம் வயதிலேயே சென்னையில் செட்டிலாகிவிட்டார் பாலாஜி. ஆரம்ப காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார்.

    'அவ்வையார்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, 'சகோதரி,' 'பலே பாண்டியா,' 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

    'அண்ணாவின் ஆசை' என்ற படம்தான் அவர் தயாரித்த முதல் திரைப்படம்.

    நடிகர் திலகம் சிவாஜியின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அதன்பிறகு சிவாஜிகணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 படங்களைத் தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான்.

    அதே போல ஜெயலலிதா தொடர்ந்து இவர் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

    இவர் தயாரித்த விதி திரைப்படம் வசூலில் புரட்சி செய்தது.

    ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கியவர்!

    ரஜினியை தமிழ் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய பில்லா படத்தின் தயாரிப்பாளர் கே பாலாஜி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X