'டூயட் எனும் பெயரில் குரங்காட்டம்!'-பாலுமகேந்திரா

வசந்தபாலன் இயக்கும் அங்காடித் தெரு படத்தின் ஆடியோவை நேற்று வெளியிட்ட பாலு மகேந்திரா, பேசியதாவது:
தமிழ் சினிமாவில் இன்றைக்கு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது உண்மைதான். ஆனால் முழு மாற்றம் வரவில்லை.
தமிழ் படங்களில் காதல் பாடல் என்ற வழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. அது எரிச்சலூட்டக்கூடிய விஷயம். டி.வியில் இதுபோல் பாடல்கள் வரும்போது ஒலியை குறைத்துவிட்டு பாருங்கள்... போதை ஏறிய இரண்டு குரங்கு குட்டிகள் ஆடுவதுபோலத்தான் தோன்றும். அதை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காகத்தான் முள்ளும் மலரும் படத்தில், பின்னணியில் பாடல் காட்சியை படமாக்க மகேந்திரனிடம் கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். காதல் வயப்பட்டவர்கள் வழக்கமாக என்ன செய்வார்களோ அது இருந்தால் மட்டுமே போதும்.
என் படங்களில் காதல் இருக்கும். மற்றபடி முடிந்தவரை அபத்தங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்.
சினிமாவை பொருத்தவரை கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். நாயகி என்றால் பட்டர் கேக் மாதிரி வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அது தவறு. பஸ் ஸ்டாப்பில் பார்க்கும் முகங்கள், அடுத்த வீட்டில் பார்க்கும் முகங்களையும் திரையில் பார்க்க வேண்டும்.
சினிமா மாறிக்கொண்டிருக்கிறது. ஸ்டார் இமேஜ் உடைந்து கொண்டிருக்கிறது. நல்ல சினிமா வரவேண்டுமென்றால் ஸ்டார் இமேஜ் உடைய வேண்டும், உடைக்கப்படும், என்றார் பாலு மகேந்திரா.


Click it and Unblock the Notifications











