ஒரு வழியாய் 'ஆக்ஷன் ரீபிளே'!
ஒரு வழியாக அக்ஷய் குமார் நடித்துள்ள ஆக்ஷன் ரீபிளே படம் நாளை திரைக்கு வருகிறது. ஈராஸ் வேர்ல்டு வைடுக்கும், தயாரிபாபளர் விபுல் ஷாவுக்கும் இடையிலான பணத் தகராறில் மத்தியஸ்தர் பொறுப்பை அக்ஷய் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து படம் நாளை திரையிடப்படுகிறது.
துபாய் சார்ந்த ஈராஸ் வேர்ல்டு வைடு, விபுல் ஷா தங்களுக்குத் தர வேண்டிய ரூ. 6.56 கோடியைத் தராததால் இப்படத்தைத் திரையிடத் தடை செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அனுகியது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜே. ஹெச். பாட்டியா முன் விசாரணைக்கு வந்தது. ஈராஸ் சார்பாக வழக்கறிஞர் ரவி கதம் ஆஜரானார். அவர் இந்த விவகாரத்தில் நடிகர் அக்ஷய் குமார் மத்தியஸ்தராக இருந்து தீர்வு காண முன் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இரண்டு தரப்பினரும் இதை ஏற்றுக் கொள்ளவே, நீதிபதி இந்த வழக்கை தீபாவளி விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாகக் கூறினார்.
நீதிபதி பாட்டியா கடந்த 2ம் தேதி, ஷாவுக்கு இன்று ஆஜராகி விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்தப் பிரச்சனைக்கு 2 தரப்பினரும் 2 நாட்களுக்குள் தீர்வு காணுமாறும் அவர் கூறினார்.
ஈராஸ் வேர்ல்டுவைடு ஷாவுக்கு தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ. 6.37 கோடி கொடுத்ததாகவும், அது தற்போது வட்டியுடன் ரூ. 6.56 கோடிகளாக உள்ளது என்று கூறியது. மேலும், இந்தத் தொகையை தயாரிப்பாளர் ஷாவை நீதிமன்றத்தில் செலுத்தும்படி உத்தரவிடுமாறும் அது நீதிபதியைக் கேட்டுக்கொண்டது.
ஷா இந்தப் படத்தை திரையிடவோ, அல்லது மூன்றாவது நபருக்கு விற்கவோ தடை விதிக்க வேண்டும். ஷா தற்போது பணக் கஷ்டத்தில் உள்ளார். அவரது லண்டன் ட்ரீம்ஸ் பட வெளியீட்டிற்குப் பிறகு பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் என நாலா பக்கமும் அவருக்கு பண நெருக்கடி உள்ளது என்று ஈராஸ் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











