கருணாநிதிக்கு பாராட்டு விழா-அமிதாப், ரஜினி பங்கேற்பு

விழாவுக்கு அமிதாப்பச்சன் தலைமை தாங்குகிறார். ரஜினி, கமல் மற்றும் திரை துறையினர் பங்கேற்கிறார்கள்.
தமிழ் திரையுலகை சேர்ந்த தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வீடு கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூர் அருகே 96 ஏக்கர் நிலத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியிருக்கிறார்.
இதையொட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி, நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. கமல்ஹாசன் நடித்து, இயக்கும் ஒரு நாடகம் நடைபெறுகிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி வசனம் எழுதியுள்ளார்.
பாராட்டு விழா ஏன்?-வி.சி.குகநாதன்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்துவது ஏன்? என்பதற்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் விளக்கம் அளித்தார்.
நிருபர்களிடம் பேசிய அவர், திரைப்பட துறையினருக்கு நல வாரியம் அமைத்தவர் கருணாநிதி தான். இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இதன் மூலம் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு திருமண உதவி, விபத்து காப்பீடு, கல்வி உதவி, ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும். ஒட்டு மொத்த திரையுலகுக்கும், பையனூரில் இடம் கொடுத்து இருக்கிறார்.
சினிமா தொழிலாளர்களுக்கு நிலம்-வீடு வேண்டும் என்று கடந்த அக்டோபர் 9ம் தேதி நடந்த மாநாட்டில் கோரிக்கை வைத்தோம். டிசம்பர் 21ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்தார்.
65 ஏக்கர் நிலம், திரைப்பட தொழிலாளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில், 50 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமையும்.
சென்னையில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் பையனூர் அமைந்துள்ளது. தினமும் அங்கிருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருவது சிரமம் என்பதால், அங்கேயே 15 ஏக்கர் பரப்பளவில், திரைப்பட நகரம் அமைய இருக்கிறது. உலகிலேயே முதல் முதலாக, தொழிலாளர்கள் நடத்தும் படப்பிடிப்பு நிலையம் இதுதான்.
இந்த திரைப்பட நகரத்துக்கு, கலைஞர் நகர்' என்று பெயர் சூட்டப்படும். படப்பிடிப்பு நிலையத்துக்கு, அண்ணா திரைப்பட கலைக்கூடம்' என்று பெயர் சூட்டப்படும்.
சண்டை காட்சிகளை படமாக்குவதற்காக சீனா-ஜப்பானில் உள்ளது போல், உலக தரத்தில் ஒரு படப்பிடிப்பு தளம் அமைய இருக்கிறது. அந்த தளத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படுகிறது. இன்னொரு தளத்துக்கு சிவாஜி பெயர் சூட்டப்படும்.
இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ் ஆகியோரின் அறிவுரையின் பேரில், உலக தரத்தில் ஒரு ஒலிப்பதிவு கூடம் அமைய இருக்கிறது. அந்த ஒலிப்பதிவு கூடத்துக்கு, டைரக்டர் ஸ்ரீதர் பெயர் சூட்டப்படும் என்றார்.
'தமிழ்ப் படம்' பார்த்த கருணாநிதி:
இந் நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் கிளவுட் நயன் மூவிஸ் தயாரித்துள்ள தமிழ்ப் படம் என்ற படத்தை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டு ரசித்தார்.
இப்படத்தை முதல்வர் கருணாநிதிக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டனர்.
நிகழ்ச்சிக்கு மனைவி தயாளு அம்மாளுடன் வந்திருந்தார் முதல்வர். அவரை அழகிரியின் மகள் அஞ்சு, படத்தின் ஹீரோ சிவா, மருமகன் விவேக், இயக்குநர் அமுதன், இணை இயக்குநர் ஜெயராஜ் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அவர்கள் புடை சூழ முதல்வர் கருணாநிதி படத்தைப் பார்த்து ரசித்தார்.


Click it and Unblock the Notifications











