twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''டூயட்டை தூக்கியெறியுங்கள்''

    By Staff
    |

    Vannathupoochi movie still
    காதல் டூயட் போன்ற தேவையற்ற, எதார்த்தத்தை மீறிய காட்சிகளைத் தூக்கியெறிந்தால்தான் சினிமா உருப்படும் என்று டைரக்டர் மகேந்திரன் கூறினார்.

    கமலஹாசன், பரதன், சிங்கீதம் சீனிவாசராவ், ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த அழகப்பன் முதல் முறையாக 'வண்ணத்துப் பூச்சி' என்ற குழந்தைகளுக்கான படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். ஒரு தாத்தாவையும், பேத்தியையும் சுற்றி பின்னப்பட்ட கதை.

    தாத்தாவாக பாலாசிங்கும், பேத்தியாக சிறுமி லட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். ரேவதி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை, டைரக்டர் மகேந்திரனும் பாலுமகேந்திராவும் இணைந்து வெளியிட, நடிகை ரேவதி பெற்றுக்கொண்டார்.

    விழாவில், டைரக்டர் மகேந்திரன் பேசியதாவது:

    தமிழ் சினிமா முன்னேறிவிட்டது என்று சொல்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். தமிழ் திரையுலகில், குழந்தைகள் பற்றிய படம் கடைசியாக எப்போது வந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு, திரையுலகில் குழந்தைகள் பற்றிய அக்கறை இல்லாமல் போய்விட்டது.

    குழந்தைகள் பற்றிய படம் தயாரிக்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை. அழகப்பன், தன் வீட்டை அடமானம் வைத்து இந்த படத்தை எடுத்து இருக்கிறார். இது சாதாரண விஷயம் அல்ல. தமிழ் சினிமாவில், பிரமாண்டம் பற்றி பேசுகிறார்கள். பிரமாண்டம் என்பதன் அர்த்தம் சிலருக்கு புரியவில்லை. அற்புதமான கருத்துக்களை கொண்ட படமே, உண்மையான பிரமாண்டம்.

    மரத்தைச் சுற்றும் டூயட் தேவையா?

    இந்திய சினிமாவில், ஒரு கெட்ட விஷயம், காதல் டூயட். எத்தனை காதலர்கள் காடு-மேடெல்லாம் அலைந்து மரத்தைச் சுற்றிப் பாட்டு பாடுகிறார்கள்? கதாநாயகனும், கதாநாயகியும் ஓடிப்பிடித்து விளையாடுவது, எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது? யதார்த்தத்தை மீறிய அசிங்கம். இன்னும் எத்தனை காலத்துக்கு இதை காட்டுவார்கள்?

    தமிழ் சினிமாவில், காதல் டூயட்டுக்கு விடை கொடுத்து அனுப்புங்கள். அப்படி அனுப்பினால், இந்தியாவில் தமிழ் சினிமாவில் மட்டும்தான் டூயட் இல்லை என்ற பெருமை கிடைக்கும். தமிழ் சினிமாவும் உருப்படும், என்றார் மகேந்திரன்.

    சாய்மிராவுக்கு வேண்டுகோள்

    இந்த விழாவில் பேசிய இயக்குநர் அமீர், சினிமா, இப்போது கார்பரேட் நிறுவனங்கள் கையில் போய்விட்டது. தசாவதாரம்' போன்ற பிரமாண்டமான படங்களுக்கு மத்தியில், வண்ணத்துப்பூச்சி' போன்ற படங்கள் எடுப்பது கஷ்டம். ஆனால் இதுபோன்ற சின்ன படங்களை திரையிட, தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

    குசேலன்' படத்தை சாய்மீரா நிறுவனம் ரூ.60 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் ஒரு கோடி கொடுத்து, வண்ணத்துப்பூச்சி' படத்தையும் வாங்கியிருக்க வேண்டும். இதை நான் சாய்மீரா நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன், என்றார்.

    நல்ல சினிமா பற்றிப் பேசுகிற ஒவ்வொரு இயக்குநரும் நிச்சயம் குழந்தைகளுக்காக ஒரு படத்தை வாழ்நாளில் எடுத்தே தீர வேண்டும் என்றார் பாலுமகேந்திரா.

    நடிகை ரேவதி, நடிகர் பாலாசிங், பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், லேனா தமிழ்வாணன், பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு, பாடல் ஆசிரியர் பழனிபாரதி ஆகியோரும் பேசினார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X