கவர்ச்சிப் 'பேய்' நமீதா!

ஆவி, பேய் என்றாலே வெள்ளை டிரஸ்ஸில் காட்டுவதுதான் தமிழ் திரையுலகின் பாரம்பரியம்.
அதிலும் பெண் பேய், ஆவி என்றால் வெள்ளைப் புடவை, விரித்துப் போட்ட தலை, நிலை குத்திய பார்வை, லகலகல சிரிப்பு எனக் காட்டுவதுதான் தமிழ்த் திரையுலகின் வழக்கம். ஆனால் ஜெகன்மோகினியில் கவர்ச்சிகரமான ஆவியாக வருகிறாராம் நமீதா.
வழக்கமான ஆவியாக, வெள்ளைப் புடவை அணியாமல், கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்களில் கலகலப்பாக, பார்த்தாலே பயப்படும்படியான தோற்றத்தில் இல்லாமல், நெஞ்சைக் கவரும் வகையில் வருகிறாராம் நமீதா.
ஆவியைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் அந்த பயமே இல்லாமல், கவர்ச்சிகரமாக, பார்த்தவுடன் ரசிக்கும் வகையில் நமீதாவின் கேரக்டரை ஜெகன்மோகினியில் வடிவமைத்துள்ளனராம்.
படத்தின் கதை இதுதான்..
24 தீவுகளுக்குச் சொந்தமான இளவரசன் மீது காதல் கொள்கிறார் நமீதா. ஆனால் இளவரசனின் தந்தை இதை ஏற்கவில்லை. மாறாக நமீதாவைக் கொன்று விடுகிறார்.
காதல் கனவு கை கூடாமல் அல்பாயில் போனதால், நமீதா ஆவியாக உருவெடுக்கிறார். காதலனை தேடி வருகிறார். அவரை கரம் பிடிக்கத் துடிக்கிறார். இப்படிப் போகிறதாம் கதை...
படம் முழுக்க கவர்ச்சிகரமான ஆவியாக வந்து, ரசிகர்களின் ஆவியை நமீதா பறிக்கப் போவது உறுதி என்கிறார்கள்.
வண்ண வண்ண கவர்ச்சி உடைகளில் நமீதாவைக் காட்டியிருக்கிறார்களாம். ஒரே படத்தில் இத்தனை டிரஸ்களை நமீதா போட்டிருப்பாரா என்பது சந்தேகம். அந்த அளவுக்கு நமீதாவுக்கு நிறைய காஸ்ட்யூம்களாம்.
இரண்டு பாடல்களை தனுஷ்கோடி பக்கமும், அந்தமான் பக்கமும் போய் படமாக்கியுள்ளனர். இதுதவிர ஹைதராபாத்துக்குப் போய் ஒரு பெரிய பிரமாண்ட அரண்மனை செட் போட்டு புயலில் சிக்கி அரண்மனை அழிவது போன்ற காட்சியைப் படமாக்கியுள்ளனராம்.
ஒரிஜினல் ஜெகன்மோகினியில் நாயகனாக நடித்த நரசிம்மராஜு இப்படத்தில் ஹீரோவின் தந்தையாக அதாவது வில்லனாக வருகிறார்.
அதேபோல ஒரிஜினல் ஜெகன்மோகினி ஜெயமாலினியின் சொந்த அக்காவான ஜோதிலட்சுமி, இப்படத்தில் நமீதாவின் அம்மாவாக வருகிறார்.
மீனவப் பெண்ணாக நடித்துள்ளார் ஜோதிலட்சுமி. சும்மா சொல்லக் கூடாது, நமீதாவுக்கே சவால் விடும் வகையில், இந்த வயதிலும் கவர்ச்சியில் கதி கலக்கியிருக்கிறாராம் ஜோதிலட்சுமி.
ஆவி பயமுறுத்துகிறதோ இல்லையோ நமீதா, ஜோதிலட்சுமி கண்டிப்பாக 'பயமுறுத்துவார்கள்' என நம்பலாம்...!


Click it and Unblock the Notifications











