டிவி நடிகர்-நடிகைகள் 9ம் தேதி உண்ணாவிரதம்!

முதல் கட்டமாக சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ராமேஸ்வரத்தில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர். நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இப்போது சின்னத்திரைக் கலைஞர்கள் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் சிவன் சீனிவாசன் கூறியதாவது:
இலங்கையில் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிக்கிறது. மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் வருகிற 9-ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
டி.வி. நடிகர் சங்கத் தலைவர் வசந்த் தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தில் டெலிவிஷன் நடிகர், நடிகைகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
நாளை ஃபெப்சி உண்ணாவிரதம்:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) சம்மேளனம் சார்பில் நாளை சாலிகிராமத்தில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து படப்பிடிப்புகளும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் சென்னை வருகிறார்கள்.
பிற்பகலில் மணிக்கு இயக்குனர் சங்க அலுவலகத்துக்கு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











