திரையுலகில் பொன்விழா-கமலுக்கு கேரள அரசு எடுக்கும் பாராட்டு விழா

கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆனதையொட்டி, தமிழ் பட உலகம் சார்பில் சென்னையில், அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
அதில் ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டு கமல்ஹாசனை பாராட்டி பேசினார்கள். கமல்ஹாசனின் ரசிகர்கள் திரளாக அந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.
அதேபோன்ற ஒரு பிரமாண்டமான பாராட்டு விழாவை கமல்ஹாசனுக்காக, கேரள மாநில அரசு நடத்த முன்வந்து இருக்கிறது. கமல்ஹாசன் தமிழ் படங்களில் நடித்தது போல் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கேரள மக்களுக்காக பல்வேறு நற்பணிகளையும் அவரது மன்றம் செய்துள்ளது.
எனவே அவருடைய 50 வருட கலைச் சேவைக்காகவும், நற்பணி இயக்கம் சார்பில் அவர் செய்துள்ள பல்வேறு சமூக சேவைகளுக்காகவும் இந்த விழாவுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள சந்திரசேகரன் நாயர் விளையாட்டு அரங்கில், வருகிற 22-ந் தேதி மாலை 6.15 மணிக்கு விழா நடக்கிறது. விழாவுக்கு, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமை தாங்குகிறார்.
மம்முட்டி-மோகன்லால் பங்கேற்பு
மலையாள பட உலகின் 'சூப்பர் ஸ்டார்கள்' மம்முட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
கமல் ஹாசனின் குரு கே.பாலசந்தர், அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பங்களாக அமைந்த பல்வேறு இயக்குநர்கள் மற்றும் பிரபல தமிழ் நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மிகப்பெரிய அரங்கில், இந்த விழா நடக்கும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா எடுப்பதில் தமிழக அரசை முந்திக் கொண்டுள்ளது கேரள அரசு என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மத்திய அரசு சார்பிலும் கமல்ஹாசனுக்காக ஒரு பாராட்டு பிளஸ் திரைப்பட விழா டெல்லியில் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











