ஷாருக்கிடம் மன்னிப்பு - அமிதாப்

அமிதாப்புக்கும், ஷாருக் கானுக்கும் இடையே கசப்புணர்வு நிலவுகிறது, இருவருக்கும் ஆகாது என்று நீண்ட நாட்களாகவே பாலிவுட்டில் ஒரு புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினை எழுந்தது, அமிதாப் கலக்கிக் கொண்டிருந்த கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி, ஷாருக் வசம் மாறிய பிறகுதான். கோன் பனேகா குரோர்பதியை ஷாருக் நடத்திய விதம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் கல்யாணத்திற்கு ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலரையும் அமிதாப் பச்சன் அழைக்கவில்லை. இதனாலும் ஷாருக், அமிதாப் மோதல் வலுத்தது.
இந்த நிலையில் தனது 'பிளாக்'கில், மிகவும் உருக்கமாக இந்த விவகாரத்தை அலசியுள்ளார் அமிதாப். ஷாருக் வருத்தப்படும் படியாக ஏதாவது பேசியிருந்தால், அதற்காக நூறு முறை மன்னிப்பு கேட்கவும் தயார் என நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார் அமிதாப்.
'பிளாக்' நாயகன், தனது பிளாக்கில் எழுதியுள்ளதன் சாராம்சம் ...
இந்த பிரச்சினை எப்படி தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இது தேவையில்லாதது, மனதுக்கு வருத்தமாக உள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக நானும், ஷாருக் கானும் பலமுறை விளக்கம் அளித்து விட்டோம். ஆனாலும் இது ஓய மாட்டேன் என்கிறது. மீடியாக்களும் இதை விடுவதாக இல்லை.
ஷாருக் கான் நடத்திய ரியாலிட்டி ஷோவை நான் கேலி செய்யவில்லை. அதுகுறித்து என்னிடம் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கருத்து கேட்டபோது எனது கருத்தைத் தெரிவித்தேன். மற்றபடி ஷாருக்கை இழிவு செய்வது போலவோ, கேலி செய்வது போலவோ எதையும் சொல்லவில்லை.
என்னைப் பற்றியும், எனது நடத்தை பற்றியும், ஷாருக்கானுக்கு ஏதாவது வருத்தம், சந்தேகம் இருந்தால் அதை அவர் மனம் விட்டுச் சொல்ல வேண்டும். அதற்காக நூறு முறை மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.


Click it and Unblock the Notifications











