'சினிமா வியாபாரமல்ல...': அழகர் மலை நாயகன் ஆர்கே!

'சினிமாவை லாப நஷ்டம் பார்க்கும் தொழிலாக மட்டுமே பார்த்தால் நிச்சயம் பைசா தேறாது. அது தொழில் என்பதையும் தாண்டி, படைப்பு சம்பந்தப்பட்டது. புதிது புதிதாக கண்டுபிடிப்பதைப் போன்றது... நல்ல சினிமா எடுக்கும் முன் மோசமான சினிமா எடுக்காமல் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்கே.
கருமாரி கந்தசாமி தயாரிப்பில், எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில், ஆர்கே, பானு நடிக்கும் அழகர் மலை படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
படத்தின் நாயகன் ஆர்கே ஏற்கெனவே 'எல்லாம் அவன் செயல்' என்ற படத்தைக் கொடுத்தவர். அவர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது பெரிய படம் இது.
இந்தப் படத்தில் தனது அனுபவங்கள் குறித்து அவர் பேசியதாவது:
இந்தப் படம் ஒரு எளிமையான அதே நேரம் அழகான கதை. பார்க்கும் யாரும் மீண்டும் வந்து படம் பார்க்கணும் என ஆசைப்படும் அளவுக்கு சிறப்பா வந்திருக்கு இந்தப்படம்.
ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு பாணுவை இந்தப் படத்துக்காக அழைத்து வந்திருக்கோம். இரண்டு பாடலுக்கு அவர் ஆடியுள்ள விதம், அவரை மீண்டும் தமிழில் பரபரப்பான் நடிகையாக்கிவிடும்.
அழகர் மலையின் சிறப்பு அதன் பாடல்கள். இசைஞானியின் இசைக்கு நற்சாட்சி பத்திரம் தேவையில்லை. அழகர் மலையின் சிறப்பைச் சொல்லும் ஒரு பாட்டுக்கு அவரே நடிச்சிக் கொடுத்திருக்கார். நாங்க அவர்கிட்ட ரொம்ப தயங்கித் தயங்கிதான் கேட்டோம். அவர் சின்ன யோசனைக்குப் பிறகு அந்தப் பாட்டு முழுக்க வர சம்மதிச்சார். எத்தனையோ ஜாம்பவான்கள் கேட்டும் முடியாதுன்னு சொன்னவர், எங்க ஆசையை நிறைவேத்தினார். மொத்தம் 6 நாட்கள் நடித்தார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்தப் பெருமை சங்கிலி முருகன் சாருக்கே சேரும், எனும் ஆர்கே, இந்தப் படத்தில் முரட்டு, குடிகார வாலிபனாக நடித்துள்ளாராம்.
எந்தப் படத்துக்கும் 5 நாட்களுக்கு மேல் நடிக்க ஒப்புக் கொள்ளாத வடிவேலு, இந்தப்படத்துக்கு மட்டும் 16 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம். படம் முழுக்க இருவரும் செய்யும் ரகளையில் தியேட்டர் அதிரும் என்கிறார் ஆர்கே.
வெறும் பாட்டு பைட்டுன்னு வந்து போறதில எனக்கு உடன்பாடில்லை. நல்ல சினிமா அதன் நிஜமான இலக்கை போய்ச் சேரும் வகையில் ஏதாவது செய்யணும், செய்வேன், என்கிறார் ஆர்கே கனவுகள் பொங்க.
அந்த உற்சாகம்தான் சினிமாவுக்கு முக்கியம்!


Click it and Unblock the Notifications











