அத்தையின் மகனை மணக்கும் பிரபு மகள்!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன்-கமலா தம்பதிகளின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம். படித்தவர். மணமகன் குணால், அவருடைய சொந்த அத்தை தேன்மொழியின் மகன். பி.இ படித்த இவர் லண்டனில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
ஐஸ்வர்யாவுக்கும், குணாலுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்கெனவே சிவாஜி குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சிவாஜிகணேசன் வீட்டில், நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மணமகன்-மணமகள் உள்பட இரண்டு பேர் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.
சிவாஜிகணேசனின் மூத்த மகள் சாந்தியின் கணவர், டாக்டர் நாராயணசாமியின் தம்பி டாக்டர் கோவிந்தராஜ்தான், தேன்மொழியின் கணவர்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமகன் சார்பில் டாக்டர் நாராயணசாமியும், மணமகள் சார்பில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் நிச்சயதார்த்த தட்டுகளை மாற்றிக் கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து பிரபு கூறுகையில்,
இது அப்பாவின் ஆசை. என் மகளுக்கும், தங்கை தேன்மொழியின் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறி வந்தார். அம்மாவின் ஆசையும் அதுதான். ஆனால் இவர்களுக்கும் மூத்தவர்கள் வீட்டிலிருந்ததால், கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அப்பா-அம்மா இருவரும் உயிருடன் இருந்தபோதே முடிவு செய்யப்பட்ட திருமணம் இது.
அவர்கள் இருந்து இந்த விசேஷம் நடந்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன். இந்த வீட்டின் சூழலே வேறு மாதிரி இருந்திருக்கும். ஐஸ்வர்யா-குணால் திருமணம் வரும் ஜனவரி மாதம் நடக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், நடிகர்கள் கமல்ஹாசன், அஜீத்குமார், விஜயகுமார், அருண்விஜய், நடிகைகள் ராதிகா, ஜோதிகா, ஷாலினி, மஞ்சுளா, விஜய் மனைவி சங்கீதா, டைரக்டர்கள் பி.வாசு, சந்தானபாரதி, உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











