தாயம்... ஒரு நவீன மகாபாரதம்!

ராஜேஷ், வடிவுக்கரசி, சுதாசந்திரன், காவேரி, அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தத் தொடருக்கு 'அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். விஜயகாந்த் நடித்த "சக்கரைதேவன்' படத்தை இயக்கிய ஜே.பன்னீர் தொடரை இயக்குகிறார்.
150 படங்களுக்கும் மேல் கதை திரைக்கதை எழுதிய முன்னணி திரை எழுத்தாளரான ஆர் செல்வராஜ் தாயம் பற்றி இப்படிச் சொல்கிறார்...
"போரில் தோல்வியடைந்து அழிந்து போனவர்களை விட வெற்றி பெற்று வாழ்பவர்கள்தான் அதிகம் வேதனையடைவார்கள் என்று புத்தர் கூறிய வார்த்தைகளைக் கதைக் கருவாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்குகிறோம். அதற்காக மகாபாரதத்தின் கடைசிப் பகுதியை எடுத்துக்கொண்டு அதை நம் காலத்து நிகழ்வாகக் கூறியுள்ளோம்.
பகைவனைக் கொல்வதன் மூலம் பகையைக் கொல்ல முடியாது; பகையின் ஆயுள் ஒவ்வொரு மரணத்திற்கு பிறகும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதுதான் 'தாயம்' தொடர் உருவான பின்னணி.
நாட்டுப்புறங்களில் பாடப்படும் திரௌபதி அம்மன் கதைப் பாடல், தருமராசன் பெரிய எழுத்துக் கதை, அல்லி ராணி, பாவை கூத்து, ஒயிலாட்டம், ஒப்பாரி பாடல்களிலிருந்து கதைக்கான சம்பவங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். 'தாயம்' -அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் விறுவிறுப்பான, வெற்றிகரமான தொடராக அமையும்" என்றார் ஆர்.செல்வராஜ்.
பெரிய திரையிலிருந்து ஒரேயடியாக சின்னத் திரைக்கு வந்துவிட்டது குறித்து கேட்டபோது, "பெரிய திரைக்கான சமரசங்கள் எதுவுமில்லாமல், நிம்மதியாக, நினைத்த கோணத்தில் கதை எழுத முடிகிறது, இதுபோதும்" என்கிறார் செல்வராஜ்.
அக்டோபர் 12-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடருக்கு இசை -ராஜேஷ் வைத்யா. ஒளிப்பதிவு -ஜி.கனகராஜ். தயாரிப்பு -சூரியராஜ் குமார்.


Click it and Unblock the Notifications











