நல்ல படம் வேண்டும் என ரசிகர்கள் அதட்டிக் கேட்க வேண்டும் - கமல்ஹாசன்

திரையரங்கம் நடத்துவதில் புதிய மாற்றத்தையே உருவாக்கிய சத்யம் நிறுவனமும் ரியல் இமேஜ் நிறுவனமும் இணைந்து உருவாக்கும் படம் திரு திரு துரு துரு. புதுமுகம் நந்தினி இயக்கியுள்ளார்.
'இளைஞர்களின் திருவிழா' என தயாரிப்பாளர்கள் வர்ணிக்கும் இந்தப் படத்தில் அஜ்மல் - புதுமுகம் ரூபா நடித்துள்ளனர். மணிஷர்மா இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க டிஜிட்டல்மயமாக்கப்பட்ட படம் இது.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. கமல்ஹாசன் பாடல்களை வெளியிட அபிராமி ராமநாதன், ஜெயம் ரவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார் மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், படத்தின் போஸ்டர்களைப் பார்த்தபோது படத்தின் நாயகனும், நாயகியும் நல்ல பொருத்தம் என்று தோன்றியது. பார்க்காமலேயே சத்யமும், ரியல் இமேஜும் நல்ல ஜோடி என்று சொல்லி விடலாம்.
இனி டிஜிட்டல் சினிமாதான் எதிர்காலம். இந்த இரண்டு நிறுவனங்களும் டிஜிட்டல் சினிமாவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. நாம் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும். சாட்டிலைட் டிவி வந்தபோது அனைவரும் எதிர்த்தனர். ஆனால் நான் எதிர்க்கவில்லை. சாட்டிலைட் டிவி அனைத்தையும் வீட்டுக்கே கொண்டு வந்து விடும். அதேபோல டிஜிட்டல் சினிமாவும் நிச்சயம் வந்தே தீரும்.
நான் இயக்குநர்களின் நடிகன். அப்படியே வளர்ந்து விட்டேன். கே.எஸ்.ரவிக்குமார் உள்பட அனைத்து இயக்குநர்களுமே எப்படி நடிக்க வேண்டும் என்பதை அபாரமாக நடித்துக் காட்டிச் சொல்லித் தருவார்கள்.
தேவர் மகன் படப்பிடிப்பின்போது, நான் சிவாஜியை ஒரு குறிப்பிட்ட காட்சியில் மீண்டும் நடித்துக் காட்டச் சொன்னேன். அவர் எப்படி நடிப்பார் என்று எனக்குத் தெரியும். ஒரு ரசிகனாக அவரிடம் அப்படி கேட்டேன்.
அவர் நடித்தது ஏற்கனவே நடித்தது போல இருந்தது. அதனால் மீண்டும் கேட்டேன். அவரும் 20ம் நூற்றாண்டு நடிப்பை நடித்துக் காட்டினார்.
அவர் உண்மையில் 20ம் நூற்றாண்டு நடிகர். நாம்தான் 19வது நூற்றாண்டிலேயே அவரை வைத்து துரோகம் செய்து விட்டோம். அப்படிப்பட்ட துரோகம் எனக்கு ஏற்பட நான் விட மாட்டேன். அதற்காகத்தான் நல்ல இயக்குநர்களை சார்ந்திருக்கிறேன்.
எனது அடுத்த கட்டம், அடுத்த கட்ட இயக்குநர்களை சார்ந்திருக்கிறது. அதேபோல ரசிகர்களும் நல்ல படம்தான் வேண்டும் என்று அதட்டிக் கேட்க வேண்டும். அப்போதுதான் நல்ல படம் வரும் என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











