அனிமேஷன் படத்தில் லாலு!

இந்திய அரசியல்வாதிகளிலேயே படா குஷியான தலைவர் லாலுதான். அவரது முக பாவனையும், பேச்சு தோரணையும், நக்கல் நையாண்டியும், வட இந்தியாவில் ரொம்பப் பிரபலம்.
இந்தி பெல்ட்டில் படு பேமஸான லாலுவை வைத்து பொம்மைகள் வந்து விட்டன. பட்டாசுகளுக்கும் பெயர் வைத்தனர். டாபிகளும் கூட லாலு பெயரில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் லாலுவை வைத்து அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்குகிறார் பீகாரைச் சேர்ந்த கார்ட்டூன் கலைஞர் பவன் கமார்.
யுனிசெப் அமைப்புக்காக சிறார் உரிமைகள் குறித்த ஏராளமான படங்களை உருவாக்கிக் கொடுத்தவர்தான் இந்த பவன் குமார். இவரது கார்ட்டூன் இடம் பெறாத தேசிய நாளிதழ்களே இல்லை எனலாம். கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட கார்ட்டூன்களை வரைந்து தள்ளியுள்ளார்.
இந்த நிலையில், தலா 2 நிமிடத்திற்கு ஓடக் கூடிய 16 அனிமேஷன் படங்களை லாலுவை கதாபாத்திரமாக வைத்து உருவாக்கவுள்ளார் பவன் குமார்.
குழந்தைப் பருவம் முதல் இப்போதைய காலகட்டம் வரையிலான லாலுவின் வாழ்க்கையை விளக்கும் வகையில் இது அமையுமாம்.
லாலு பிரசாத் யாதவ் எருமை மாட்டின் மீது சவாரி செய்தது, பள்ளிக்கு கட் அடித்து விட்டு விளையாடப் போனது, அரசியலில் நுழைந்தது உள்ளிட்டவை சுவாரஸ்யமான முறையில் இதில் விளக்கப்படவுள்ளதாம்.
லாலுவைப் பற்றி எடுக்கவுள்ள இந்த அனிமேஷன் படங்கள் மிகப் பெரிய அளவில் புகழ் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பவன் குமார்.
இந்த அனிமேஷன் படத்தில் லாலுவுக்காக குரல் கொடுத்திருப்பவர் சசி. இவர் பவன் குமாரின் ஆரம்ப காலத்து நண்பர்.
பின்னணி இசையை ரத்னேஷ் - கோபாலா அமைத்துள்ளனர்.
இந்த அனிமேஷன் படத்துக்கு லாலு பிரசாத் யாதவ் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். சில கிளிப்பிங்குகளை கொண்டு போய் லாலுவிடம் காட்டியுள்ளார் பவன் குமார். அதைப் பார்த்த அவர், சந்தோஷமடைந்து, உடனே அனிமேஷன் படத்தை முடித்து எடுத்து வந்து காட்டு என்று உத்தரவு போட்டு விட்டாராம் லாலு.
லாலுவின் அனுமதி கிடைத்து விட்டாலும் கூட, பணம் போதிய அளவில் இல்லாததால், அனிமேஷன் பட முயற்சிகள் படு மெதுவாக போய்க் கொண்டிருப்பதாக பவன் குமார் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











