இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் 'பெரியார்'!

தமிழக அரசு உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'பெரியார்' படம் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 'டப்பிங்' செய்யப்படுகிறது.
திராவிட இயக்கத் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மூன்று வருடங்களுக்கு முன்பு பெரியார் எனும் தலைப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
'பெரியார்' வேடத்தில் சத்யராஜும், மணியம்மையாக குஷ்புவும் நடித்து இருந்தனர். ஞானராஜ சேகரன் இயக்கினார். இந்த படத்தை தயாரிக்க தமிழக அரசு நிதி உதவி அளித்தது.
இப்போது பெரியார் படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் இந்தி, மலையாளம் மொழிகளிலும் டப்பிங் ஆகி வருகிறது.
தெலுங்கில் 'பெரியார்' படம் வருகிற 9-ந்தேதி ஆந்திரா முழுவதும் திரையிடப்படுகிறது. அன்றைய தினம் ஹைதராபாத்தில் முக்கிய பிரமுகர்களுக்காக இப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். சத்யராஜ், குஷ்பு, திராவிடர் கழக தலைவர் வீரமணி, ஆந்திர முதல்வர் ரோசையா, கல்வி மாணிக்க வரபிரசாத் ஆகியோரும் சிறப்பு காட்சியில் பங்கேற்கிறார்கள்.
பெரியார் படத்துக்கான தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் பி.சுனில் வாங்கியுள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டி நடித்த 'அம்பேத்கார்' படத்தையும் வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறும்போது, 'சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பெரியாரின் வாழ்க்கையை ஆந்திர மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறேன்.
ஆந்திராவில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமென நம்புகிறேன்' என்றார்.
தெலுங்கு பதிப்புக்கு கவிஞர் கதிபத்மராவ் வசனம் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











