'பிரபாகரன்' விரைவில் ரிலீஸ்!

இலங்கையைச் சேர்ந்தவர் துஸ்கரா பெரீஸ். சிங்கள இயக்குநரான இவர் பிரபாகரன் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இலங்கை இனப் போர் குறித்த கதைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இனப் போர், அதனால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சந்தித்து வரும் துயரங்கள், சிரமங்கள், இந்தப் பிரச்சினை தீராமல் நீண்டு கொண்டிருப்பதற்கு யார் காரணம், பிரச்சினையின் மூல வேர் என்ன என்பது குறித்து இப்படத்தில் அலசியுள்ளாராம் பெரீஸ்.
விடுதலைப் புலிகளின் இயக்கத்தில உள்ள ஒரு தற்கொலைப் படை நபர் அங்கிருந்து தப்பி வருகிறார். தற்கொலைப் படையில் சேர்ந்ததன் காரணம் குறித்து அவர் விளக்குகிறார். இதுதான் படத்தின் முக்கிய கதை. இதன் பின்னணியில் இனப் பிரச்சினை, சண்டை, துயரம், அவலம் ஆகியவற்றை விளக்கியுள்ளாராம் பெரீஸ்.
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் பிரபாகரன் என்கிறார் பெரீஸ். மனிதாபிமான கண்ணோட்டத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. யாருக்கும் சாதகமாகவும், யாருக்கும் பாதகமாகவும் இதில் கருத்துக்கள் சொல்லப்படவில்லை என்றும் பெரீஸ் தரப்பு விளக்குகிறது.
ரோமில் திரைப்படக் கலையைக் கற்றவராம் பெரீஸ். படம் முழுக்க இலங்கை இனப் பிரச்சினையை அலசியுள்ளதாக கூறும் பெரீஸ், ஆனால் இதற்கும் இலங்கை அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











