'மொட்டை போட்ட' வெங்கட் பிரபு!
மங்காத்தா படம் முடிந்து வெளியான கையோடு, மொட்டை போட்டுக் கொண்டுள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்தப் படம் ஆரம்பித்ததும் அவர் தாடி வளர்க்க ஆரம்பித்தார். படமும் தாடியும் வளர்ந்து, கடந்த வாரம் மங்காத்தா திரைகளைத் தொட்டது. படம் ஹிட் என்று ரிப்போர்ட் வர ஆரம்பித்ததும், அதை பெரிய வெற்றியாகக் காட்ட பல்வேறு முயற்சிகளை மங்காத்தா டீம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
இப்போது திருப்பதிக்குப் போய் முடி காணிக்கை செலுத்தியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. காரணம், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாம்.
அசலை விட மங்காத்தா ஓகே என்பதுதான் பாக்ஸ் ஆபீஸில் இப்போதைய ரிப்போர்ட். அதுவும் முதல் 5 நாட்கள் விடுமுறை என்பதால், கிடைத்த பெரிய ஓபனிங்தான் காரணம்.
இப்போது விடுமுறை முடிந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது. நாளையிலிருந்து நிலவரம் எப்படி என்பதைப் பொறுத்தே மங்காத்தா வெற்றி நிர்ணயிக்கப்படும்.
இந்த 2011-ஐப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பெரிய வெற்றி (பிளாக்பஸ்டர்) என்றால் அது ராகவா லாரன்ஸின் காஞ்சனா பெற்றுள்ள வெற்றிதான். இன்றும்கூட இரவு இரண்டாம் காட்சிக்கு கூட்டம் அலை மோதுகிறது இந்தப் படத்துக்கு.
வெறும் ரூ 4 கோடியில் எடுக்கப்பட்ட 'காஞ்சனா' இன்றுவரை ரூ 48 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. தெலுங்கில் ரூ 2.5 கோடிக்கு இந்தப் படம் விற்கப்பட்டது. அங்கு இதுவரை ரூ 20 கோடியைத் தாண்டிவிட்டதாம்!
ஆனால் மங்காத்தா ரூ 40 கோடியில் தயாரானதாக கூறுகிறார்கள். முதல் 5 நாள் வசூல் இன்னும் 20 கோடிக்குள்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். புறநகர் திரையரங்குகளில் முன்புபோல இஷ்டத்துக்கும் டிக்கெட் விற்க முடியாத நிலை. இனி வரும் நாட்கள்தான் மங்காத்தா எந்த அளவு வெற்றி என்பதை தெளிவாகக் கூறும்!


Click it and Unblock the Notifications











