'ஆச்சி'க்கு அமெரிக்க மரியாதை!

'ஆச்சி' ..!
மக்கள் திலகம், நடிகர் திலகம் மாதிரி தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் நிரந்தரமாய் ஒட்டிக் கொண்ட இனிய அடையாளப் பெயர். நவரச நாயகியாக வலம் வரும் மனோரமாவுக்கு திரையுலகம் வைத்த செல்லப் பெயர்தான் 'ஆச்சி'.
அந்த 'ஆச்சி' நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது! இன்று அந்த மகா நடிகைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
காரைக்குடிக்குப் பக்கத்தில் பள்ளத்தூர் என்ற கிராமத்தில் 1943-ல் பிறந்த கோபிசாந்தா தனது 12வது வயதில் ஒரு நாடகக் குழுவில் நடிப்பைத் தொடங்கினார்.
பள்ளத்தூர் பாப்பா என செல்லமாக அழைக்கப்பட்ட கோபிசாந்தாவுக்கு, அந்த நாடகக் குழுவின் ஆர்மோனியக்காரர்தான் மனோரமா என்று பெயர் சூட்டினார்.
1958-ல் கவியரசு கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கிய கலைப் பயணம் இன்னும் ஓய்வின்றித் தொடர்வதுதான் மனோரமாவும் தமிழ்த் திரையுலகமும் பரஸ்பரம் கொண்டுள்ள காதலின் அடையாளம்.
தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஆந்திர அண்ணா என்டிஆர், செல்வி ஜெயலலிதா என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா ஒருவர்தான்.
பல மொழிகளில் 1300 மேற்பட்ட படங்களில் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனையாளர் வரிசையிலும் இடம்பிடித்துள்ளார் ஆச்சி.
கடந்த ஆண்டு இவரது சாதனைகளைப் பாராட்டி ஜோப்பியாரின் சத்தியபாபா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது.
பார்த்திபனின் புதிய பாதை படத்தில் நடித்ததற்காக 1988-ல் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பெற்ற ஆச்சிக்கு இது பொன்விழா ஆண்டு.
இந்தப் பொன்விழாவைக்குப் பொன்னாடை போர்த்துவது போல் வந்திருக்கிறது கலிபோர்னியா பல்கலைக் கழக அறிவிப்பு.
மனசுக்கு நிறைவாக இருக்கிறது!


Click it and Unblock the Notifications











