தீயவன் படத்தை ரிலீஸ் செய்ய தடை

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தனது மனைவி பெயரில் தீயவன் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதற்காக என்னிடம் பணம் கேட்டார். அதற்கு, எனது சகோதரர் ஸ்ரீரஞ்சனை படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும், பணத்தை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பணம் கொடுத்தேன்.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.30 லட்சத்து 68,000 கொடுத்தேன்.
இதையடுத்து தீயவன் படத்தின் இணை தயாரிப்பாளராக சேர்க்கப்பட்டேன். எனது சகோதரர் ஸ்ரீரஞ்சன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஆடியோ ரிலிஸூக்கு என்னை அழைக்கவில்லை. படத்தின் டைட்டிலிலும் இணை தயாரிப்பாளராக எனது பெயரை சேர்க்கவில்லை.
பணத்தையும் கதிரேசன் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டால் உரிய பதலளிக்கவில்லை. எனவே தீயவன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சண்முகப்பிரியாவுக்கு பணத்தை திரும்ப தரும் வரை தீயவன் படத்தின் நெகட்டிவை கதிரேசனுக்கு பிரசாத் கலர் லேப் கொடுக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications