என்னை அவமானப்படுத்திவிட்டார் அதிசயா - ஜனநாதன்

இயற்கை, ஈ ஆகிய வெற்றிப் படங்களை உருவாக்கியவர் இயக்குநர் ஜனநாதன். தற்போது பேராண்மை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிசயா என்கிற வசுந்தரா உள்பட 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
ஏற்கனவே வட்டாரம், ஜெயம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்தவர் அதிசயா. பேராண்மை படத்திலிருந்து தனது பெயரை வசுந்தரா என மாற்றிக் கொண்டார். பேராண்மை படத்தின் படப்பிடிப்பு தலக்கோணம் காட்டில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் ஜனநாதன் பேச்சை மீறி தலைக்கோணத்தில் தங்காமல் திருப்பதிக்குப் போய், படப்பிடிப்புக்கு வராமல் நின்றுவிட்டாராம் வசுந்தரா.
இதனால் இயக்குநர் ஜனநாதனுக்கும் வசுந்தராவுக்கும் மோதல் எழுந்தது. இது தொடர்பாக நடிகை வசுந்தரா, நடிகர் சங்கத்தில் போன் மூலம் புகார் செய்தார். ஜனநாதன் தன்னை அடிக்க வந்ததாக புகாரில் கூறியிருந்தார்.
கொஞ்ச நாளைக்கு முன் இதே போன்றதொரு புகாரில் இயக்குநர் தங்கர் பச்சான், இயக்குநர் சாமி ஆகியோர் மாட்டிக் கொண்டதும் மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு நிலைமை போனதும் நினைவிருக்கலாம்.
எனவே விவகாரத்தைச் சரியாகக் கையாள, முன்னெச்சரிக்கையாக வசுந்தரா மீது இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் எஸ்பி ஜனநாதன்.
படப்பிடிப்புக்கு வருவதாகக் கூறிவிட்டு ஏமாற்றியதோடு, மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதற்காக தன்னைப் பற்றி தாறுமாறாக புகார் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி இயக்குநர் ஜனநாதன் கூறியதாவது:
பேராண்மை படத்தில் நடிக்க வந்ததிலிருந்தே பெரும் தொந்தரவாகத் திகழ்கிறார் வசுந்தரா. இதுபற்றி என்னிடம் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புகார் செய்தார்கள். வசுந்தரா வளர்ந்துவரும் நடிகை என்று கூறி அவர்களை நான் சமாதானப்படுத்தினேன்.
பேராண்மை படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சி முழுக்க, முழுக்க தலக்கோணம் காட்டிலேயே படமாக்க திட்டமிட்டேன்.
குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பாடல் காட்சி படமாக்கி முடிக்க வேண்டியிருந்ததால், படப்பிடிப்பு குழுவை சேர்ந்த அனைவரும் தலக்கோணம் காட்டிலேயே தங்கியிருந்தார்கள். வசுந்தரா மட்டும் திருப்பதியில் தான் தங்குவேன் என்று அடம் பிடித்தார். சரி, திருப்பதியிலே தங்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.
சம்பவத்தன்று நான் என்னுடைய அறையில் குளித்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வசுந்தரா அங்கு வந்து என் உதவியாளரிடம் 'திருப்பதி போய்விட்டு நாளை வந்துவிடுகிறேன்' என்று சொல்லிவிட்டு போய் இருக்கிறார். ஆனால் அவர் சொன்னபடி திரும்பி வரவில்லை. இத்தனைக்கும் கம்பெனி காரை எடுத்துக் கொண்டு சென்றவர் திரும்பவே இல்லை.
இதனால் படப்பிடிப்பு தடை பட்டதோடு கிளைமாக்ஸ் காட்சிக்காக செய்திருந்த ஏற்பாடுகளும் வீணானது. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம். அதுமட்டுமல்லாமல் மலிவான விளம்பரத்துக்காக, தேசிய விருது பெற்ற என்னைப்பற்றி அவதூறுச் செய்திகளை வெளியிட்டு என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தனது புகாரில் அவர் கூறியுள்ளார்.
விரைவில் இருதரப்பையும் அழைத்துப் பேச முடிவு செய்துள்ளன நடிகர் சங்கமும் இயக்குநர்கள் சங்கமும்.


Click it and Unblock the Notifications











