தமிழர்களை அழிக்க மத்திய அரசும் முயற்சி?-பாரதிராஜா

நான் இலங்கையில் சிறுமியாக இருக்கும்போதே தமிழர்கள் மீதான ராணுவ, போலீஸ் தாக்குதல்களை நேரில் பார்த்தவள் என நடிகை ராதிகா கூறினார்.
இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, சென்னையில் நேற்று திரைப்படத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்த உண்ணாவிரதத்துக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (FEPSI) தலைவர் எஸ்.விஜயன் தலைமை தாங்கினார்.
இதில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, விஜய டி.ராஜேந்தர், எஸ்.பி.முத்துராமன், அமீர்ஜான், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பாரதிராஜா பேசுகையில்,
தமிழர்கள் மத்தியில் இன உணர்வு கடந்த 30 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு வந்தது. ராமேஸ்வரம் போராட்டத்துக்குப்பின், தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஒன்று திரண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்திடம், போரை நிறுத்து என்று சொல்ல மத்திய அரசுக்கு வலிமை இருக்கிறது. ஆனால் சொல்ல மறுப்பதை பார்த்தால், மத்திய அரசும் தமிழ் இனத்தை அழிக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது என்றார்.
இயக்குனர் டி.ராஜேந்தர் பேசுகையில்,
இலங்கை தமிழர்களை போன்ற ஒரு பாவப்பட்ட இனத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள், மராட்டியத்தை சேர்ந்தவர்கள், பஞ்சாபிகள் தாக்கப்பட்டால், அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?
இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை தமிழ் இன உணர்வு தீ பற்றிக்கொண்டே இருக்கும். தனி ஈழம் பிறந்தே தீரும். தமிழா, அதுவரை சோர்ந்து விடாதே என்றார்.
நடிகை ராதிகா பேசுகையில்,
நான் இலங்கையில் படித்து வளர்ந்தவள். சிறுமியாக இருக்கும்போதே தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்களை நேரில் பார்த்தவள். கலவரம், தீவைப்பு, சிங்கள ராணுவத்தின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு மத்தியில் நானும், என் தம்பியும் ஒருமுறை சிக்கிக் கொண்டோம்.
என் தம்பியை குப்பை தொட்டியில் மறைத்து வைத்து, அவன் உயிரை காப்பாற்றினேன். அந்த போராட்டம் இன்னும் ஓயவில்லை. இலங்கை தமிழர்கள் அன்பானவர்கள். அவர்கள் யாரிடமும் கையேந்த மாட்டார்கள் என்றார்.
கவிஞர் தாமரை பேசுகையில்,
மொழி, பாண்பாடு அடிப்படையில் தேசிய இனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழனும் ஒரு தேசிய இனம்தான். தமிழன் மனதில் வன்முறை கிடையாது. வந்தாரை வாழ வைப்பான். போரை நிறுத்து, ஆயுதம் கொடுப்பதை நிறுத்து என்று இலங்கை அரசிடம் நாம் கேட்கிறோம். ஆனால் இன்னும் போர் நிற்கவில்லை.
இங்கே நாம் நிதி திரட்டுவதில் பலன் இல்லை. ஒரு பக்கம் குண்டு போட்டு கொல்கிறான். இன்னொரு பக்கம் பால் ஊற்றுவது எதற்காக? இந்த பணம் ராஜபக்சேவுக்குத்தான் போய் சேரும். மனசாட்சி உள்ள எவரும் நிவாரண நிதி கொடுக்காதீர்கள். நான் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், நான் தமிழச்சி என்றார்.


Click it and Unblock the Notifications











