ராம.நாராயணன் அணி அமோக வெற்றி!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு நேற்று பலத்த பாதுகாப்புக்கிடையே தேர்தல் நடந்தது.
ஏற்கெனவே தலைவர் பதவியில் இருந்த ராமநாராயணன், மீண்டும் போட்டியிட்டார்.
அவருக்கு எதிராக பஞ்சு அருணாச்சலம் தலைமையில், ராதிகா, கேயார் உளிளிட்டோர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன.
தலைவராக மீண்டும் ராம நாராயணன் 394 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட பஞ்சு அருணாச்சலம் 135 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதிகா 222 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவருடன் மற்றொரு செயலாளர் பதவிக்கு போடியிட்ட கேயார் 219 வாக்குகள் பெற்றார். இவ்விருவரையும் எதிர்த்துப் போட்டியிட்ட ராம நாராயணன் அணியின் கே.முரளிதரன் 286 வாக்குகள் பெற்றார். மற்றொரு செயலாளராக சிவசக்தி பாண்டியன் 299 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவு முழு விவரம்:
மொத்த வாக்குகள் - 602
பதிவான வாக்குகள் - 532
தலைவர்
ராமநாராயணன் - 394
பஞ்சு அருணாச்சலம் - 135
துணைத் தலைவர்கள்
அன்பாலயா பிரபாகரன் - 340
எஸ்ஏ.சந்திரசேகரன் - 313
ஏஎம் ரத்னம் - 197
பாபு கணேஷ் - 168
செயலாளர்கள்
கே.முரளிதரன் - 286
சிவசக்தி பாண்டியன் - 299
ராதிகா சரத்குமார் - 222
கேயார் - 219
பொருளாளர்
காஜா மைதீன் - 345
ராதா கிருஷ்ணன் - 184
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் உடனடியாக கூட்டப்பட்ட பொதுக் குழுவில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் தலைவர் ராம நாராயணன் நிருபர்களிடம் பேசினார்:
இந்த வெற்றி தமிழ் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம். தேர்தல் முடிந்துவிட்டது. இனி யாரும் எங்களுக்குப் பகைவர்கள் இல்லை. தேர்தல் வரைதான் அணி. இனி நாம் அனைவரும் ஒரே அணிதான்.
அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் வகையில் இனி வரும் இரண்டு ஆண்டுகளிலும் செயல்படுவோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள் என்றார் ராமநாராயணன்.
பாரதிராஜா பாராட்டு
தேர்தலில் வென்ற ராமநாராயணன் அணிக்கு இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா நேரில் வந்து பாராட்டுத் தெரிவித்தார். இந்த வெற்றி தமிழனுக்குக் கிடைத்த வெற்றி என்றார் அவர்.
ராதிகா
தேர்தல் முடிவு குறித்து ராதிகா கூறுகையில், இந்தத் தோல்வியை ஏற்கிறோம். ஒரு மாற்றத்துக்காக களத்தில் இறங்கினோம். ஆனால் இந்தத் தோல்வியால் எங்களுக்கு எந்த இழப்புமில்லை. இழந்தவர்கள், எங்களைத் தோற்கடித்தவர்கள்தான் என்றார்.


Click it and Unblock the Notifications











