மலேசிய பிரதமரின் பாடிகார்டுகளுடன் மோதிய சமீரா ரெட்டி

அஜீத், பாவனா நடிக்க, சரண் இயக்கத்தில் உருவாகும் படம் அசல். இப்படத்தின் ஷூட்டிங் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இப்படத்தில் சமீரா ரெட்டியும் இன்னொரு நாயகியாக இருக்கிறார்.
படப்பிடிப்புக்காக சமீரா ரெட்டி கோலாலம்பூரில் தங்கியிருந்தார். அப்போது அங்கு கசப்பான அனுபவம் ஒன்றை அவர் சந்திக்க நேரிட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஷூட்டிங்கை முடித்து விட்டு எனது ஹோட்டலுக்குத் திரும்பினேன். ஹோட்டல் கார் பார்க்கிங் பகுதியில் உள்ள லிப்ட்டுக்காக காத்திருந்தேன்.
அப்போது ஒரு பத்து பாதுகாவலர்கள், மனிதச் சங்கிலி போல நின்று கொண்டு ஒரு நபரை லிப்ட்டில் ஏற்ற வந்தனர். லிப்ட் கீழே வந்தபோது நான் ஏறப் போனேன். அப்போது அவர்களும் மிகவும் பாதுகாப்போடு உள்ளே ஏறினர்.
எனக்கு அது வித்தியாசமாகப்படவே, ஹோட்டல் ஊழியரிடம் நான் இதிலேயே போகலாமா அல்லது அடுத்த லிப்ட்டில் போகலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் பரவாயில்லை, இதிலேயே போகலாம் என்றார்.
இதையடுத்து நான் லிப்ட்டில் ஏறிக் கொண்டேன். மெயின் லாபி தளத்திற்கு லிப்ட் வந்ததும், நான் வெளியேற முயன்றேன். அப்போது ஒரு பாதுகாவலர் எனது தோள்பட்டையைப் பிடித்துத் தள்ளி விட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இருந்தாலும் கோபமடைந்து, அவரது கையை பிடித்துத் தட்டி விட்டேன். என்ன செய்கிறாய் என்று கோபமாக ஆங்கிலத்தில் கேட்டேன். பதிலுக்கு அந்த பாதுகாவலர் மலாய் மொழியில் கோபமாக கூறினார். அவருக்குத் துணையாக இன்னொரு பாதுகாவலரும் வந்து கத்தினார். அவர்கள் பேசியது எனக்குப் புரியவில்லை.
இந்த நிலையில், அந்த இருவரும் எனது உடலில் கை வைத்து லிப்ட்டை விட்டு வலுக்கட்டாயமாக இறக்க முயன்றனர். அப்போது ஹோட்டல் ஊழியர் ஓடி வந்து என்னைக் காப்பாற்றி அழைத்துச் சென்றார்.
பின்னர் அந்த ஹோட்டல் ஊழியர், அவர்கள் பிரதமரின் மெய்க்காவலர்கள் என்று கூறினார். அதற்காக நான் பயப்படவில்லை. வெளிநாடு என்பதால் பிரச்சினையை பெரிதபடுத்த விரும்பாமல் விட்டு விட்டேன்.
பிரதமரின் பாதுகாவலர்களாக இருந்தாலும் கூட நான் துணிச்சலுடன் நடந்து கொண்டதாகவே நினைக்கிறேன். அதற்காக வருத்தப்படவில்லை. என்னிடம் யாரும் தவறாக நடப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்றார் இன்னும் கொஞ்சம் கோபத்துடன் உள்ள சமீரா.
ரெட்டியாச்சே, சும்மாவா...!


Click it and Unblock the Notifications











