ஷாருக் கான் படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை-சிவசேனா பல்டி

இதுகுறித்து சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், மை நேம் இஸ் கான் படம் திரையிடுவதை சிவசேனா கட்சியினர் இடையூறு செய்ய மாட்டார்கள்.
ஷாருக் கானுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறது. இதை நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது இது வலுவாகியுள்ளது, ஊர்ஜிதமாகியுள்ளது.
இத்தாலியத் தாய் மற்றும் அவரது மகனின் ஆதரவுடன் தாராளமாக தனது படத்தை வெளியிட்டுக் கொள்ளட்டும் ஷாருக் கான். அதை நாங்கள் தடுக்கப் போவதிலலை என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
ராகுல் காந்தியின் பயணத்தைத் தொடர்ந்து சிவசேனாவினரின் வீர தீரம் புஸ்வாணமாகிப் போயுள்ளது. இதனால் ராகுல் பக்கம் மும்பை மக்கள் சாய்ந்துள்ளனர். அதேபோல ஷாருக் கானுக்கு ஆதரவாக பாலிவுட்டும் திரளத் தொடங்கி விட்டது. மேலும், மகாராஷ்டிர அரசும் இதுவரை இல்லாத அளவுக்கு துணிச்சலாக செயல்படத் தொடங்கியுள்ளது.
அதைவிட முக்கியமாக மகாராஷ்டிர மக்களிடையே சிவசேனா மீது கடும் வெறுப்பு உருவாகி வருகிறது.
இதன் காரணமாகவே சிவசேனா தனது பாய்ச்சலை அடக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
'ராகுல் ரயிலேற நாங்கள்தான் காரணம்':
இந் நிலையில் சிவசேனா கட்சியினரின் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே ரயில் பயணத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி என்று கூறியுள்ளார் சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே.
ராகுல் பயணத்தின் வெற்றியால் சரமாரியாக சேதமடைந்து கிடக்கிறது சிவசேனா வட்டாரம். இருப்பினும் மீசையில் மண் ஒட்டாத கதையாக இதற்கும் ஒரு காரணத்தைக் கூறியுள்ளது சிவசேனா.
அதன் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே இதுகுறித்துக் கூறுகையில், கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி சிவசேனா போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதற்காக நான் சிவசேனா தொண்டர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
கருப்புக் கொடிகளுடன் ராகுலை வரவேற்க விரும்பினோம். அதைச் செய்து விட்டோம்.
விலே பார்லே பைதாஸ் ஹால், ரமாபாய் நகர், கட்கோபர் ஆகிய பகுதிகளில் ராகுல் காந்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கெல்லாம் எங்களது தொண்டர்கள் வெற்றிகரமாக கருப்புக் கொடி காட்டினர்.
எங்களது போராட்டத்தின் தீவிரம் மற்றும் நெருக்குதல் காரணமாகவே ராகுல் காந்தி ரயில் பயணத்தை மேற்கொண்டார்.
அதேசமயம், பாதுகாப்பு இல்லாமல் ராகுல் காந்தி வந்திருந்தாலும் கூட அவருக்கு எங்களால் ஒரு தீங்கும் ஏற்பட்டிருக்காது. காரணம், எங்களது நோக்கம் அவருக்கு எதிர்ப்பைக் காட்டுவதுதான்.
(அந்தேரி ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ஏடிஎம் மையத்திற்கு ராகுல் சென்றதை சுட்டிக் காட்டி) டெல்லியின் ஏடிஎம் மாக மாறி விட்டது மும்பை. டெல்லியிலிருந்து இங்கு வந்து யார் வேண்டுமானாலும் பணத்தை எடுத்துச் செல்லலாம் என்றாகி விட்டது. அதைத்தான் நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம் என்றார் உத்தவ்.


Click it and Unblock the Notifications











