25 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜென்ஸி!

-நினைக்கும்போதே, ஞாபகங்களில் ஒரு தேன்நதி ஓடும் பரவசம் தெரிகிறதல்லவா... இசைஞானியின் மயக்கும் இசையில், ஜென்ஸியின் சிலிர்க்கும் குரலில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான அமுத கானங்கள் இவை.
இந்தப் பாடலைப் பாடிய ஸ்டார் பாடகி ஜென்ஸி, அலைகள் ஓய்வதில்லை வரை ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தார், தன் அருமையான குரல் வளத்தினால். ஆனால் ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்றே தெரியாமல் போய்விட்டது.
கேரளாவைச் சேர்ந்த இவர், சில காலம் தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் படுவதாக விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனாலும் அவரது திரையுலக மறுபிரவேசம் பற்றி எதுவும் சொல்லவில்லை.
இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் பாட வருகிறார்.
சேவலுக்குப் பிறகு, ஜின்னா தயாரிக்கும் சரவெடி என்ற புதிய படத்துக்காக, 'எனக்குள் எவனோ அவனே இவனோ...விரும்பி அழைத்தேன்...திரும்பி நடந்தான்...' என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலை கபிலன் எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு புதிய வண்ணம் தந்த ஜாம்பவான் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், இந்த படத்தை இயக்குகிறார்.
ஜென்சியை மீண்டும் பாட வைத்தது பற்றி டைரக்டர் ஜான் மகேந்திரன் கூறியதாவது:
சரவெடி படத்துக்காக கபிலன், ஒரு மென்மையான பாடலை எழுதியிருந்தார். அந்த பாடலை, காதல் ஓவியம்... போன்ற இனிமையான பாடல்களை பாடிய ஜென்சி பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் சொன்னேன்.
அவரும் ஆர்வமாகிவிட, இருவரும் சேர்ந்து அவரை தேட ஆரம்பித்தோம். அவர் துபாயில் இருப்பதாக சிலர் சொன்னார்கள். ஒரு மலையாள பாடகர் மூலம் அவருடைய முகவரியும், டெலிபோன் எண்களும் கிடைத்தன. நாங்கள் அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, ஜென்ஸியே எடுத்துப் பேசினார்.
எங்களின் விருப்பத்தை தெரிவித்ததும், 'கடைசியாக நான் பாடி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது என் குரல் எப்படி இருக்குமோ... ரசிகர்களுக்குப் பிடிக்குமோ இல்லையோ...' என்று தயங்கினார். மெட்டைக் கேளுங்கள். அதன்பிறகு முடிவு செய்யுங்கள்... என்றோம் நாங்கள். அதன் பிறகே அவர் செனனை வந்தார்.
மெட்டைக் கேட்டதும் அவருக்கும் பிடித்துவிட்டது. பாட சம்மதித்து, இப்போது பாடியும் கொடுத்துவிட்டார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 2 மணி நேரம்தான், என்றார் ஜான்.
ரொம்ப ஆர்வமா இருக்கில்ல... ஆனா இன்னும் இரண்டு மாதம் வெயிட் பண்ணனும் பாட்டைக் கேட்க!


Click it and Unblock the Notifications











