காதல் மணம் புரிந்த சிரஞ்சீவி மகளுக்கு பெண் குழந்தை!

சிரஞ்சீவியின் 2வது மகள்தான் ஸ்ரீஜா. இவரும் வக்கீல் ஒருவரின் மகனான சிரீஷ் பரத்வாஜும் காதலித்தனர். ஆனால் இந்தக் காதலுக்கு சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. ஆனாலும் தனது காதலைக் கைவிடுவதாக இல்லை ஸ்ரீஜா.
இதையடுத்து வீட்டோடு வைக்கப்பட்டார் ஸ்ரீஜா. இதனால் தக்க சமயம் பார்த்து காத்திருந்தார் ஸ்ரீஜா. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். காதலருடன், ஹைதராபாத்தில் உள்ள கோவிலில் கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்புக்காக டெல்லிக்குப் போனார்கள்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்,
பாதுகாப்பு தருமாறும் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஸ்ரீஜா, பரத்வாஜ் ஜோடிக்கு பாதுகாப்பு தர டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டது.
சிறிது காலம் டெல்லியில் இருந்த இந்த காதல் ஜோடி, பின்னர் ஹைதராபாத் வந்தது. தன்னால் தனது மகளுக்கு எந்த ஆபத்தும் வராது என்று சிரஞ்சீவியும் அறிவித்தார்.
இந்த நிலையில் கர்ப்பமடைந்தார் ஸ்ரீஜா. நேற்று முன்தினம் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
இதனால் ஸ்ரீஜா, பரத்வாஜ் ஜோடி மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியும் தேடி வந்தது. காரணம், அம்மா சுரேகா, சகோதரர் ராம் சரண் தேஜா, தாய் மாமா அல்லு அரவிந்த் ஆகியோர் அங்கு வந்து நின்றதுதான்.
அவர்களை ஸ்ரீஜாவும், பரத்வாஜும் எதிர்பார்க்கவில்லை. மகளிடம்சென்ற சுரேக கண்கலங்கியபடி அவரது கைகளைப் பிடித்துக் கொண்டாராம். பின்னர் மகளுக்கு முத்தமிட்ட அவர், பேத்தியை தூக்கி எடுத்து கொஞ்சினாராம்.
சிரஞ்சீவி ஊரில் இல்லாததால் வர முடியவில்லை என்று சுரேகா தெரிவித்தார். ஆனால் சிரஞ்சீவி, இதுவரை இருந்த கோபத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, மகளுடன் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறி பேசினாராம்.
பேத்தி பிறந்ததன் மூலம் மகள் மீதான அனைத்து கோபத்தையும் சிரஞ்சீவி விட்டு விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இரு குடும்பமும் ஒன்றாகி விடும் என சிரஞ்சீவி தரப்பினரும், பரத்வாஜ் தரப்பினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











