ஆகாஷ் வைத்திருப்பது பழைய உத்தரவு... நான் கோர்டில் புதிய உத்தரவு வாங்கியுள்ளேன்! - வனிதா

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மூத்த மகள் வனிதாவுக்கும் இடையிலான மோதல், இப்போது வனிதாவுக்கும் முன்னாள் கணவர் நடிகர் ஆகாஷுக்குமான சண்டையாக மாறியுள்ளது.
விஜயகுமாரின் ஆதரவாளர் எனப்படும் ஆகாஷ் மீது நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து வனிதா புகார் மனு அளித்தார்.
அதில் விஜயகுமாரும், முதல் கணவர் ஆகாஷூம் சேர்ந்து தனக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுவதாகவும், தனது மகன் விஜய்ஸ்ரீஹரியை என்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்கின்றனர் என்றும் மகனை நான் விட்டு கொடுக்கமாட்டேன். அவனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் ஆகாஷ் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் போலீஸ் கமிஷனரை சந்தித்த அவர் விஜய்ஸ்ரீஹரி எனது பாதுகாப்பில் இருக்கத்தான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மகள் ஜோவிகா மட்டும் வனிதா பாதுகாப்பில் வளர அனுமதிக்கப்பட்டு உள்ளது. மகனை எழும்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்க வைக்கிறேன்.
விஜயகுமார் பேரனை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்துச் சென்றார். தற்போது தந்தை மகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதால் மகனை அழைத்து வந்துவிட்டேன் என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை வனிதா இன்று பதிலளித்தார். அவர் கூறுகையில், "ஆகாஷ் பழைய கோர்ட்டு உத்தரவை வைத்துக்கொண்டு பொய் சொல்கிறார். இருவரும் விவாகரத்து பெற்றபோது இதுபோன்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் ஒரு வருடம் கழித்து கோர்ட்டில் மகன் என்னுடன் இருக்க நான் புது உத்தரவு பெற்றுள்ளேன்.
அதன்பிறகு விஜய் ஸ்ரீஹரி என்னுடன்தான் இருந்தான். நான்தான் படிக்க வைக்கிறேன். பள்ளி கட்டணம் செலுத்தியதற்கான பில், அவன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் என் பெயர்தான் உள்ளது. இதுபற்றி போலீசிலும் தெரிவித்து உள்ளேன்.
இதுநாள் வரை ஆகாஷூக்கு விஜய் ஸ்ரீஹரி மேல் அக்கறை இல்லை. இப்போது திடீரென்று விஜயகுமார் தூண்டுதல் பேரில் அக்கறை உள்ளவர்போல் நடிக்கிறார். எனது மகனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்...", என்றார்.


Click it and Unblock the Notifications











