டைரக்டர் செல்வா கொலை வழக்கு: நடிகை தப்பி ஓட்டம்

செல்வா எனும் அறிமுக இயக்குநர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி குடி போதையில் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் கொலையுண்ட தினத்தன்று புதுமுக நடிகை சங்கீதாதான் அவருடன் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிந்தது. சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
சங்கீதா மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு கோர்ட்டில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், டைரக்டர் செல்வா கொலை வழக்கில் வேறு பின்னணி இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று செல்வாவின் மனைவி மைதிலி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதி மன்றம். இதனால் சங்கீதா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. செல்வாவின் மனைவி மைதிலி, பட அதிபர் நடராஜன் மற்றும் செல்வாவின் தங்கை ஆகியோரிடம் விசாரணை நடந்தது. நடராஜன் செல்வா டைரக்ஷனில் படம் தயாரித்தார். அதில் ஏற்பட்ட மோதலில் செல்வா கொல்லப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரித்தனர்.
ஆனால் செல்வா கொலைக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டார் நடராஜன். அடுத்த கட்டமாக மீண்டும் நடிகை சங்கீதாவிடம் போலீசார் விசாரித்தனர்.
ஒருகட்டத்தில் நடிகை சங்கீதாதான் இந்த கொலை வழக்கில் குற்றவாளி என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். சங்கீதா மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சங்கீதா ஏற்கனவே போதைக்கு அடிமையாகி 2 முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார். போலீசார் காப்பாற்றி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சங்கீதா திடீரென்று தலைமறைவாகி விட்டார். விசாரணையின்போது அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











