ராதிகா ஷூட்டிங்கில் ரகளை

ராதிகாவுக்குச் சொந்தமான ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் டிவியில் தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. தற்போது சன் டிவியில் அரசி, லட்சுமி ஆகியவை உள்ளிட்ட சில தொடர்களை ராடான் ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனை நேரில் சந்தித்து ராதிகா ஒரு புகார் கொடுத்தார். அதில், தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரசி மற்றும் லட்சுமி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது லைட்மேன், சினி டெக்னீஷியன் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கினர். கலைஞர்களையும் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் சில லட்சம் மதிப்புள்ள படப்பிடிப்புச் சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர்.
தாக்குலதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ராதிகா.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சிம்ரன் நடிக்கும் சின்னத்திரை தொடருக்கான படப்பிடிப்புத் தளத்திற்குள்ளும் புகுந்து சினி டெக்னீஷியன் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தகராறு செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினி டெக்னீஷியன் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சினிமாவில் கொடுப்பது போலவே தங்களுக்கு சின்னத்திரையிலும் சம்பளம் தர வேண்டும் ென்று கோரி வருகிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தற்போது ராதிகாதான் உள்ளார். அவரிடம் ஊதிய உயர்வு குறித்து பேசியிருந்தனர். அவரும் கவனிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











