நடிகர்கள் புகார் - தினமலர் செய்தி ஆசிரியர் கைது
சென்னை: நடிகை புவனேஸ்வரி விவகாரத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில், நடிகர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நடிகர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், பத்திரிகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று மாலை சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் திடீரென கைது செய்யப்பட்டார்.
முன்னதாக நடிகர் சங்கத்தின் கண்டனக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமல்ஹாசன் வரவில்லை. ரஜினி காந்த் தவிர விஜயகாந்த், விக்ரம், சூர்யா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் இதில் கலந்து கொண்டனர்.
நடிகர் மற்றும் இயக்குநரான சேரன், இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசுகையில், சம்பந்தப்பட்ட அந்த செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்திருக்கு. இந்த விவகாரத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்வதற்கு உத்தரவிட்ட கலைஞருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











