twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்குப் பிறகும் எனது ரசிகர்களின் நற்பணிகள் தொடர வேண்டும்-கமல்ஹாசன்

    By Sudha
    |

    எனக்குப் பிறகும் எனது ரசிகர்களின் நற்பணிகள் தொடர வேண்டும். அதனால்தான் பல வருடங்களுக்கு முன்பே எனது ரசிகர்கள் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி விட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

    நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 56வது பிறந்த நாளை வழக்கம் போல நலப் பணிகள் மூலம் கொண்டாடினார். அவரது கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் பல்வேறு உதவிகளை அளித்தனர். அதை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வழங்கினார்.

    கமல்ஹாசன் நற்பணி மன்றம் தமிழகத்தில் எந்த ஒரு தனிப்பட்ட இயக்கமும் செய்யாத பெரும் செயலை சத்தமின்றி செய்து வருவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அது ரத்ததான முகாம்கள். தமிழகத்தில் நடந்து வரும் ரத்ததான புரட்சியில் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

    கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் அயராத உழைப்பால் அவர்கள் வசம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரத்தக் கொடையாளிகள் உள்ளனர் என்பது வியப்புக்குரியது. ரத்ததானம் மட்டுமல்லாமல் பல்வேறு ஆக்கப்பூர்வமான சமூக சேவைகளில் தனது ரசிகர்களை திருப்பி விட்டது கமல்ஹாசன் செய்த சாதனை என்று கூறலாம்.

    நேற்று நடந்த பிறந்தநாளின் போது தனது ரசிகர்ளை நற்பணி நாயகர்களாக மாற்றியது குறித்து விவரித்தார் கமல்ஹாசன்.

    கமல்ஹாசன் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

    கடந்த 35 வருடங்களாக நாங்கள் ரத்ததானப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் இதைத் தொடங்கியபோது 30 ஆயிரம் கொடையாளிகளையாவது உருவாக்க வேண்டும் என்ற லட்சயத்துடன்தான் தொடங்கினோம். அப்போது நன்கு திட்டமிட்டு ரத்ததான முகாம்களை நாங்கள் நடத்தவில்லை. ஆனால் இப்போது திட்டமிட்டு நேர்த்தியாக செய்து வருகிறோம். நாங்கள் நிர்ணயித்த அளவைத் தாண்டி இப்போது கொடையாளிகள் வளர்ந்து விட்டனர்.

    எங்களது நற்பணி மன்றத்தைச் சேர்ந்த கொடையாளிகள் பல்வேறு அமைப்புகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் ரத்த தானம் செய்து வருகின்றனர்.

    எங்களது கொடையாளிகளைக் கொண்டு மிகப் பெரிய ரத்ததான டேட்டா பேங்க்கைத் தொடங்குவது குறித்து தற்போது சில அமைப்புகளுடன் நாங்கள் பேசி வருகிறோம்.

    இதை பெரிய விஷயமாக நான் கருதவில்லை. சமூகம் எனக்கும், எனது ரசிகர்களுக்கும் ஒரு அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. அந்த சமூகத்திற்கு நாங்கள் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான்.


    மற்றவர்கள் தொடங்குவதற்கு முன்பே, நீண்ட காலத்திற்கு முன்பே, நான் எனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி விட்டேன். இதில் நான் மிகவும் குறியாக இருந்தேன். இதை நான்அறிவித்தபோது எனது தயாரிப்பாளர்கள் பயந்தனர். ரசிகர்கள் என்னை விட்டுப் போய் விடுவார்களோ, நமது படங்களுக்கு பிரச்சினை வருமோ என்று பயந்தனர். ஆனால் எனது ரசிகர்கள் அதைப் பொய்யாக்கி விட்டனர்.

    ஒரு ரசிகர் தனது விருப்ப நடிகரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் நற்பணிகள் அப்பிட இல்லை. அது எனக்குப் பிறகும் தொடர வேண்டும். அதனால்தான் எனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றுவதில் நான் தீவிரமாக இருந்தேன் என்றார் கமல்ஹாசன்.

    மன்மதன் அம்பு படம் குறித்து கேட்ட கேள்விக்கு, மன்மதன் அம்பு ஒரு பொழுதுபோக்குப் படம். இது நகைச்சுவைப் படமா என்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் கதையை நான்தான் எழுதியுள்ளேன். இதற்கு எந்தவிதமான விளக்கம் தருவதில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை. இது மகாநதி போலவா அல்லது அன்பே சிவம் போலவா அல்லது தேவர் மகனா, விருமாண்டியா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன்.

    இது ஒரு தனிக் கதை. இதில் நிறைய ரொமான்ஸ் உண்டு, நல்ல நகைச்சுவை உண்டு, இதை எப்படி வகைப்படுத்தி, எந்தப் பிரிவில் வைப்பது என்பதில் டிவிடி லைப்ரிகள் திணறலாம், கடைசியில் இதை ரொமான்டிக் காமெடி என்ற முடிவுக்கு அவர்கள் வரலாம். அப்படியும் கூட அதைச் சொல்லி விட முடியாது. இருந்தாலும் ரொமான்டிக் காமெடி என்பதில் லேசான உடன்பாடு எனக்கு உண்டு.

    கே.எஸ்.ரவிக்குமார் ஒரு கெளரவமான, மரியாதைக்குரிய, நேரடியான, கடுமையான உழைப்பாளி. நான் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து வந்தவன். இன்று உள்ள இளம் இயக்குநர்களை விட 2 மடங்கு கடுமையாக உழைப்பவர் பாலச்சந்தர். அவருக்குக் கீழ் நான் பயிற்சி பெற்றவன். அவரால் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பவன். எனவே அவரைப் போல கடுமையாக உழைப்பவர்களை எனக்குப் பிடிக்கும். அதில் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒருவர். அவருக்கு எந்த டென்ஷனும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக என்னைப் போல கற்பதில் ஆர்வம் உடையவர் கே.எஸ்.ரவிக்குமார் என்று ரவிக்குமாருக்கு புகழாரம் சூட்டினார் கமல்.

    (இந்த செய்தியுடன் இணைந்துள்ள புகைப்படத்தின் கதை சுவாரஸ்யமானது.

    மாரிட்ஸ் வான் ஸ்வின்ட் என்ற கலைஞரின் புகழ் பெற்ற ஓவியத்தின் பாதிப்பில், ஏபி.ஸ்ரீதர் வரைந்த வித்தியாசமான ஓவியம் இது. ஸ்ரீதர் ஏற்கனவே ஒரே கேன்வாஸில் 50 கமல்ஹாசன் கேரக்டர்களை வைத்து 50 கமல்ஹாசன் படங்களை வரைந்தவர் ஸ்ரீதர்.

    இந்தப் படத்தில் மொத்தம் 50 கமல்ஹாசன்கள் இருக்கிறார்கள். அனைவரும் பள்ளிச் சிறார்கள் உருவத்தில். வாத்தியாரும் கமல்ஹாசன்தான் -அது அவ்வை சண்முகி என்பது சுவாரஸ்யமானது.)

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X