ரசிகர்களின் 'இதயம்' கவர்ந்த முரளி!

By Chakra

Murali
இதயமே, இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே....

இந்தப் பாடலை வலித்து, ரசித்தவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம். அந்தப் பாடலும் சரி, அதில் நடித்த முரளியும் சரி தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர் முரளி. அந்தப் படத்தில் கடைசி வரை தனது காதலை சொல்லாமலேயே போய் விடுவார் முரளி. இப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் சட்டென மறைந்து போய் விட்டார் முரளி.

1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக நடித்த, கெச்சலான உருவத்துடன், அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். யார் இந்தப் பையன், இவ்வளவு வேகமாக, அழகாக நடிக்கிறாரே என்ற ஆச்சரியம் அனைவருக்கும்.

முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அந்த வகையில் முரளிக்கு பூவிலங்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது.

1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

பூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.

அவரது நடிப்பில் வெளியான இன்னொரு சூப்பர் ஹிட் படம்தான் இதயம். இது முரளியின் கேரியரில் மிகப் பெரிய படம் என்பதில் சந்தேகமில்லை. காதலை கடைசி வரை சொல்லாமலேயே போகும் ஹீரோவாக அட்டகாசமான நடிப்பைக் காட்டியிருந்தார் முரளி.

கதையும், முரளியின் நடிப்பும், இசையும், பாடல்களும் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றிப் படங்களின் வரிசையில் இணைத்தது

சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.

ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று. பாசமுள்ள தம்பியாக அண்ணனுக்கும், மனைவியை விட்டுக் கொடுக்க முடியாத கணவராகவும் அவர் அருமையாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

பன்ச் டயலாக் வைப்பது, அதி புத்திசாலித்தனமாக பேசுவது என எதுவும் இல்லாமல் வெகு இயல்பான நடிகர் அவர்.

2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி.

முரளியின் காதல் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது... நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.

எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.

முரளியின் மறைவு எதார்த்தமான, இயல்பான தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X