காங்.கின் 'ரம்யா மிரட்டல்'-பணிந்த அம்பரீஷ்!

ஒக்கலிகா (கெளடா) சமூகத்தைச் சேர்ந்தவரான அம்பரீஷ் மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். ஆனால், இம்முறை பாஜகவுக்குத் தாவ நினைத்தார். ஆனால், அவர் போட்ட சில நிபந்தனைகள் ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து காங்கிரஸ் சீட் கொடுத்தும் கூட போட்டியிடுவது குறித்து ஏதும் பேசாமல் அமைதி காத்து வந்தார். பாஜகவுடனும் ரகசியமாக பேசி வந்தார். இதனால் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு மண்டியாவுக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் காத்திருந்தது காங்கிரஸ்.
இந் நிலையில் நடிகை ரம்யாவை களமிறக்கப் போவதாக காங்கிரஸ் தரப்பு தகவல் பரப்பியது. இவரும் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவரே.
அம்பரீசின் பலமே ஜாதியும் சினிமாவும் தான் என்ற நிலையில் ரம்யா மூலம் அவரது ஜாதி, சினிமா பலத்தை சிதறடிக்கத் தயாரானது காங்கிரஸ். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் ரம்யாவுக்கு சீட் தரலாம் என காங்கிரஸ் மேலிடத்திடம் கூறிவிட்டார்.
மேலும் மண்டியா மாவட்டத்தில் பலமாக உள்ள தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் ரம்யாவை ஆதரித்து அம்பரீசுக்கு பாடம் புகட்ட முன் வந்ததாக தகவல்கள் பரவின.
பாஜக இந்தப் பகுதியில் அவ்வளவாக பலமில்லாத நிலையில் காங்கிரசும் கெளடாவும் இணைந்து தனது கோட்டைக்கே வேட்டு வைக்க தயாராவதை உணர்ந்த அம்பரீஷ் காங்கிரஸ் சார்பில் மண்டியாவில் போட்டியிட ஒப்புக் கொண்டுவிட்டார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
கேரளத்தைச் சேர்ந்த நடிகை சுமலதா தான் அம்பரீசின் மனைவி ஆவார்.


Click it and Unblock the Notifications











