சென்னை நட்சத்திர கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி!

By Staff

Vennila kabadi kuzhu/
சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை வாரியர்ஸ் அணி நடிகர் விக்ராந்த் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றது.

தமிழ் நடிகர்களும், தெலுங்கு நடிகர்களும் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. தமிழ் நடிகர்கள் அடங்கிய அணிக்கு சென்னை வாரியர்ஸ் என்றும், தெலுங்கு நடிகர்கள் அடங்கிய அணிக்கு ஆந்திரா கிங்ஸ் என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

போட்டியை கவிஞர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். டாஸ் வென்ற சென்னை வாரியர்ஸ் அணியின் கேப்டன் ரமணா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி நடிகர் விக்ராந்தும், ஜித்தன் ரமேசும் சென்னை வாரியர்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.

விக்ராந்தின் ஆட்டம், ஒரு கைதேர்ந்த பேட்ஸ்மேனின் ஆட்டம் போல் மிகவும் அருமையாக இருந்தது. 2-வது ஓவரிலேயே 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அட்டகாச சதம்

ரமேஷ் 2 ரன்களில் வெளியேற, அடுத்து அவரது சகோதரர் நடிகர் ஜீவா வந்தார். ஜீவாவும், விக்ராந்தும் நேர்த்தியாக ஆடினார்கள். அவ்வப்போது பவுண்டரியும், சிக்சரும் அடித்து அரங்கை கலகலக்க வைத்தனர். மைதானத்தின் ஒரு பகுதியில், நடன கலைஞர்கள் ஆடிப்பாடி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

விக்ராந்த்-ஜீவா ஜோடியைப் பிரிக்க முடியாமல் டாக்டர் ராஜசேகர் தலைமையிலான ஆந்திர கிங்ஸ் அணியினர் தடுமாறினர். கிரிக்கெட் ஹீரோவாக மின்னிய நடிகர் விக்ராந்த் 59 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். பின்னர் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் சதத்துடன் ஓய்வு பெற்றார். இதேபோல் ஜீவாவும் 69 ரன்களில் (49 பந்து) விலகி விட்டார்.

இதன் பின்னர் பரத், ஜே.கே.ரித்தீஷ், நடிகர் ஆர்யா, சாந்தனு ஆகியோர் பேட்டிங் செய்தனர். பின்னர் அவர்களும் அடுத்தவர்களுக்கு வழிவிட்டனர்.

2 ஓவர்கள் எஞ்சி இருக்கும் போது ஆட வந்தார் நடிகர் சிம்பு. வந்த வேகத்தில் ஒரு பவுண்டரியும், அதைத் தொடர்ந்து ஒரு சிக்சரும் அடித்தார். சிக்சர் அடித்ததும் சதம் கண்டது போல், ரசிகர்களை நோக்கி பேட்டை காண்பித்து ஆரவாரம் செய்தார். ஆனால் அடுத்த பநந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினார்!

சென்னை வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 26 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.

சென்னை வாரியர்ஸ் வெற்றி

தொடர்ந்து ஆடிய ஆந்திரா கிங்சும் நல்ல தொடக்கம் கண்டது. குறிப்பாக தமிழ் நடிகர்கள் அதிகமான உதிரிகளை வாரி இறைத்தனர். ஸ்ரீகாந்த் முதல் ஓவரிலேயே 7 வைடுகளை போட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே அந்த அணி 50 ரன்களைக் கடந்தது.

ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் வீழ்ந்ததும், ஆந்திராவின் ஸ்கோர் சரிய தொடங்கியது.

இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை வாரியர்ஸ் அணி 'கிளினிக் ஆல் கிளியர்' நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது. சென்னை அணி தரப்பில் ஆர்யா 3 விக்கெட்டுகளும், பரத், விஷ்ணு தலா 2 விக்கெட்டுகளும், விக்ராந்த், ரமேஷ் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

ஆட்டநாயகன் விக்ராந்த்

சதம் அடித்தது மட்டுமில்லாமல், பந்து வீச்சு பீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு ஆல்-ரவுண்டராக ஜொலித்த நடிகர் விக்ராந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் அதிக சிக்சர் (4), பவுண்டரி அடித்ததற்காக தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசையும் தட்டிச் சென்றார்.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கினர்!

வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பெரியகருப்பன் பரிசுக்கோப்பையை வழங்கினார். வெற்றி பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும், தோல்வி அடைந்த அணிக்கு ரூ.25 ஆயிரமும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்த தொகையை இலங்கை தமிழர்களுக்காக, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக இரண்டு அணிகளின் கேப்டன்களும் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சரிடம் இதற்கான காசோலையை அவர்கள் அளித்தனர்.

போட்டியின் வர்ணனையாளராக நடிகர் சின்னிஜெயந்த், அப்துல் ஜாபர், சின்னத்திரை தொகுப்பாளர் மகேஷ்வரி ஆகியோர் இருந்தனர்.

நடிகைகள் காயத்ரி ஜெயராம், கஸ்தூரி, சரண்யா, தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா, நடிகர்கள் விஜய்பாபு, ஸ்ரீமன், நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உள்ளிட்டோரும் போட்டியை நேரில் பார்த்து ரசித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X