செருப்பை துறந்த திரையுலகினர்!

திரிசக்தி சுந்தர்ராமன் தயாரிப்பில், பார்த்திபன் - சாயாசிங் நடித்த படம் வல்லமை தாராயோ. சுந்தர்ராமன் மகள் மதுமிதா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் தொடக்க விழா சில மாதங்களுக்கு முன் சென்னை தி.நகர் தியாகராஜர் மண்டபத்தில் நடந்தது. அப்போது விழா மேடையில் அம்மன் சிலை வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு புரோகிதர்கள் மந்திரம் ஓதி பூஜையெல்லாம் நடத்தினர்.
அப்போது, விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த குஷ்பு, செருப்பு அணிந்து கால்மீது கால் போட்டபடி அமர்ந்திருந்தார். இதனால் பெரும் பிரச்சினை எழுந்தது, குஷ்பு மீது பல கோர்ட்டுகளில் வழக்கும் தொடரப்பட்டது.
நேற்று முன்தினம் இப்படத்தின் 100வது நாள் விழா இதே மண்டபத்தில் நடந்தது. இம்முறையும் அதே போல அம்மன் சிலை மேடையில் வைக்கப்பட்டிருந்தது.
விழா மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட, ஒவ்வொருவராக சென்றனர். மேடை ஏறும் போது மறக்காமல் தங்கள் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டுச் சென்றனர். எதற்கு வம்பு என்ற முன்னெச்சரிக்கையுடன் அனைவரும் செருப்புகளை கழற்றி வைத்து விட்டனர்.
விழாவில் பாக்யராஜ், ராமநாராயணன், சரத் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றுப் பேசினர்.
'இப்போதெல்லாம் 4 வாரங்கள் நன்றாக ஓடினால் போதும், போட்ட முதல் வந்துவிட்டது என தயாரிப்பாளர்கள் சொல்லும் நிலை உள்ளது. அந்த வகையில் வல்லமை தாராயோ... 100 நாட்கள் ஓடியிருப்பது பெரிய விஷயம் என்றார் சரத்குமார்.
அடுத்து சுந்தர்ராமன் தயாரிக்கும் படத்துக்கு ஹீரோ சரத் குமார்தான் என்பது கூடுதல்.


Click it and Unblock the Notifications











