சரிகா படத்தில் உதவி இயக்குநரான அக்ஷரா

கமல்ஹாசனுக்கு சரிகா மூலம் இரண்டு புதல்விகள். மூத்தவர் ஸ்ருதி, இளைய மகள் அக்ஷரா. ஸ்ருதி, தனது பெற்றோர் வழியில் நடிகையாகி விட்டார். அதேசமயம், இசை உள்ளிட்ட பிற துறைகளிலும் திறமைசாலியாக உள்ளார்.
இளையவரான அக்ஷரா மும்பையில் செட்டிலாகி விட்டார். அங்கு பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்க ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்து அக்ஷரா கூறுகையில்,
கடந்த 9 மாதத்துக்கு முன் மும்பை சென்றுவிட்டேன். என் குருநாதர் கவுதம் - கோகிலா ஏற்பாடு செய்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். சென்னையை ரொம்பவே மிஸ் செய்கிறேன். இங்கிருக்கும்போது ஆங்கிலத்தில் பேசினாலும், தமிழில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. மும்பையில் அந்த வாய்ப்பு இல்லை. பலவகை நடனம் கற்றிருக்கிறேன். இதில் சாதிப்பதே என் குறிக்கோள்.
ஹிப் - ஹாப் நடனம் மிகவும் பிடிக்கும். குச்சுப்புடி, பரதநாட்டியமும் கற்றிருக்கிறேன். இதை மேடையில் ஆட மாட்டேன். இந்தியில் சொசைட்டி படத்தை இயக்கும் ராகுல் தோல்கியாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். எனது அம்மா சரிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சினிமா சம்பந்தமாக எந்த படிப்பும் படிக்கவில்லை. உழைப்பின் மூலமே அதை அறிய விரும்புகிறேன். ஏற்கனவே நண்பர்களுடன் சேர்ந்து 3 விளம்பர படம் இயக்கி உள்ளேன். எப்போதாவது சோர்வாக உணர்ந்தால் அம்மா, அப்பாவிடம் பேசுவேன்.
நானும் ஸ்ருதியும் சகோதரிகள் மட்டுமல்ல. நெருங்கிய தோழிகள் போல் பழகுவோம்.
எனக்கு நடிப்பில் விருப்பமில்லை. கேமராவுக்குப் பின்னால் இருக்கவே விரும்புகிறேன். நடனம், சினிமா இந்த இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது.
அப்பாவை இயக்கும் ஆசையும் எனக்கு உண்டு. ஆனால் அது மிகக் கடினமானது. அவருக்காக ஒரு கதாபாத்திரத்தை நான் உருவாக்குவது கடினம். அதேசமயம், ஏதோ ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வேண்டும் என்றும் என்னால் அவரிடம் சொல்ல முடியாது என்றார் அக்ஷரா.


Click it and Unblock the Notifications











