அஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு-பாரதிராஜா எதிர்ப்பு

பாராட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வந்தாக வேண்டும் என திரையுலகினர் மிரட்டுவதாக அஜீத் இந்த விழாவில் முதல்வரிடம் முறையிட்டார். காவிரி பிரச்சினை போன்றவற்றுக்கு கலைஞர்களை கூப்பிட்டு போராட்டம் நடத்துவதால் என்ன பலன்? நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் பேசியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிகர்கள் தங்கள் சமூக உணர்வை வெளிக்காட்ட வேண்டும். வருவதற்கு சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு கருத்து கூறுவதால் யாருக்கு என்ன பயன்? என்று பாரதிராஜா போன்றவர்கள் அஜீத்துக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சக நடிகர்கள் விஷால், ஆர்யா, த்ரிஷா, பாடகி சின்மயி போன்றோர் அஜீத்தை பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அஜீத்தின் பேச்சுக்கு விழாவிலேயே எழுந்து நின்று கைத் தட்டி தனது ஆதரவைத் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா, விஷால் மற்றும் த்ரிஷா மூவருமே தங்கள் வலைப்பூக்கள் மற்றும் ட்விட்டரில் அஜீத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதே கருத்தை நாங்களும் தெரிவிக்க விரும்பினாலும் பயம் காரணமாக அமைதி காத்ததாகவும், ஆனால் அஜீத் துணிந்து இதற்கு ஒரு முடிவு கட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
சின்மயி தனது ட்விட்டரில் அஜீத்தை வாழ்த்தியும் பாராட்டியும் செய்தி அனுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











