காஞ்சிவரம்..பணம் வாங்காத பிரகாஷ் ராஜ்

காஞ்சிவரம்' படத்துக்கும் அதில் நடித்த தனக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில்,
ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததை விட, தமிழ் படத்துக்கு விருது கிடைத்திருப்பது இன்னும் பெருமையா இருக்கு.
இயக்குனர் பிரியதர்ஷனுக்கு என் முதல் நன்றி. அவர் இந்திப் பட உலகில் பிஸியாக இருந்த நேரத்தில் ஒருநாள் என்னை சந்தித்தார். நான் ஒரு தமிழ் படம் எடுக்கப் போகிறேன். அந்த கதைக்கு நீதான் பொருத்தமாக இருப்பாய். நீ சம்மதித்தால், உடனே அந்த படத்தை எடுப்பேன். இல்லையென்றால் திட்டத்தை தள்ளிப்போடுவேன் என்றார். கதையை அவர் என்னிடம் சொன்போது ஆடிப்போய் விட்டேன்.
பிரியதர்ஷன் என்னிடம் கதையை சொல்லி முடித்தபோது என் கைகள் நடுங்கின, கண்ணீர் விட்டேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. நெடு நேரம் ஆனது.. அந்த உணர்ச்சிகளி்ல் இருந்து வெளியே வர. இப்படிப்பட்ட கதையை ஏன் இத்தனை நாட்களாக முடக்கி வைத்திருந்தீ்ர்கள் என்று அவரை திட்டிவிட்டுத் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
மிகுந்த வலி நிறைந்த பாத்திரம் அது. அதில் நடித்தது எனக்கே ஒரு பயிற்சியாகத்தான் இருந்தது.
இந்த விருது பிரியதர்ஷனுக்கும் அவரது டீமுக்குமே சாறும். அவர் நினைத்திருந்தால் இன்னொரு கமர்சியல் படம் எடுத்து சம்பாதித்து இருக்க முடியும். ஆனால், தனது நேரத்தை நல்ல படத்துக்காக செலவிட்ட மனிதர் அவர் என்றார்.
இதில் நடிக்க பிரகாஷ் ராஜ் பணமே வாங்கவில்லை என்பது யாருக்கும் தெரியாத செய்தி. இப்படிப்பட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததே போதும் என்று சொல்லிவிட்டாராம்.
விருது குறி்த்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில்,
25 வருடங்களாக எத்தனையோ படங்களை இயக்கியுள்ளேன். பல விருதுகளையும் பெற்றுள்ளேன். காஞ்சிவரம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
பிரகாஷ் ராஜுன் நடிப்பே, இந்த படத்திற்கு விருது கிடைக்க முக்கிய காரணம். தமிழ் சினிமா கலைஞர்கள் மிகத் திறமையானவர்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











