ரஜினி பங்கேற்ற உற்சாக 'ப்ளாஷ்பேக் விருந்து'!

இந்த உணர்வுபூர்வமான விருந்துக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர். அக்காலத்தில் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பிரபு, மோகன், பிரதாப்போத்தன், கார்த்திக், சுமன், சுரேஷ், பானுசந்தர் முதலாவதாக வந்தனர். அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதாவுடனும், விஷ்ணுவர்த்தன் மனைவி பாரதியுடனும் கலந்து கொண்டனர். மொட்டைத் தலையுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போயிருந்தார் அந்தக் கால யூத் ஹீரோ சுரேஷ்.
நடிகைகள் ராதிகா, நதியா, ரம்யாகிருஷ்ணன், ரேவதி, சுகாசினி, பூர்ணிமா, லிஸி பிரியதர்ஷன், ஷோபனா ... என வயதான தாரகைகள் நிறைய...
நிகழ்ச்சிக்கு சிகரம் வைப்பது போல் ரஜினி வந்தார். அவர் வந்த பிறகு அந்த விருந்தே படுகலகலப்பாகிப் போனது. ரஜினி வந்த கையோடு 'கேக்' கொண்டு வரப்பட்டது.
பழைய கதாநாயகர்கள், நாயகிகள் சூழ்ந்து நிற்க ரஜினி கேக் வெட்டினார். எல்லோரும் கைதட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள். பின்னர் ரஜினியே கைப்பட தன் நண்பர்கள், சக நட்சத்திரங்களுக்கு 'கேக்' ஊட்டினார்.
ரஜினி ஜோடியாக நடித்த நதியா, ராதா, ராதிகா, பூர்ணிமா போன்றோர் அவருடன் தனித்தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். பிறகு சுவையான உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டபடியே ஒருவருக்கொருவர் ஜோடியாக நடித்த பழைய மலரும் நினைவுகள் பற்றி பேசி, கண்கள் கசிய விடை பெற்றுச் சென்றனர்.


Click it and Unblock the Notifications











