பெங்களூரில் நடிகர் சுட்டுக் கொலை - தயாரிப்பாளர் தலைமறைவு
பெங்களூர்: பெங்களூரில் கன்னட நடிகர் ஒருவர் இரவு விருந்தின்போது ஏற்பட்ட தகராறில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற தயாரிப்பாளர் தலைமறைவாகி விட்டார்.
பெங்களூர் கம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் வினோத். அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கூடவே சினிமாவிலும் ஈடுபட்டார். சமீபத்தில் வெளியான மாதேசா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் கோவர்த்தனமூர்த்தி.
2 நாட்களுக்கு முன்பு பாகலூர் என்ற இடத்தில் உள்ள தனது ரிசார்ட்டில் கோவர்த்தனமூர்த்தி பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல கோவர்த்தனமூர்த்தியின் நண்பர்களும் கலந்து கொண்டனர். பல்வேறு வகை மதுவுடன் விருந்து நடந்து கொண்டிருந்தது. நள்ளிரவைத் தாண்டியபோது திடீரென வினோத்துக்கும், கோவர்த்தனமூர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடுமையாக திட்டிக் கொண்டனர்.அப்போது கோவர்த்தன மூர்த்தி தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து வினோத்தை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
உடனடியாக அவரை பெங்களூர் கொண்டு வந்து தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வினோத் உயிரிழந்தார்.
வினோத்தை சுட்ட கோவர்த்தனமூர்த்தி தலைமறைவாகி விட்டார். விருந்துக்கு வந்த அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர்.
ரியல் எஸ்டேட் தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோவர்த்தனமூர்த்தி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











