பிரகாஷ் ராஜுக்கு பிடிவாரண்ட்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சித்து என்கிற தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். அப்படத்தில் ஹீரோயினாக கிரணும், நாயகனாக சசிகாந்த்தும் புக் ஆனார்கள். ரகுவரன் இதில் மேயராக நடித்துள்ளார். காவல்துறை அதிகாரி வேடம் பிரகாஷ் ராஜுக்கு.
நாகேஸ்வரராவ் இயக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாத். ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இன்னும் 3 நாட்கள் நடித்தால் பிரகாஷ்ராஜின் போர்ஷன் முடிவடைந்து விடும் தருவாயில் தயாரிப்பாளருக்கும், பிரகாஷ் ராஜுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
இதையடுத்து நடிக்க மறுத்து விட்டார் பிரகாஷ் ராஜ். இதனால் படம் வளராமல் அப்படியே நின்று போய் விட்டது. இதுகுறித்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பிரசாத் புகார் கொடுத்தார். விசாரணை நடத்தப்பட்டு, பிரகாஷ் ராஜ் நடித்துக்கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று பிரகாஷ் ராஜ் நடிக்க வந்தார்.
ஆனால் படம் முழுக்க மீசை இல்லாமல் வந்திருந்தார் பிரகாஷ் ராஜ். மீண்டும் நடிக்க வந்தபோது அடர்த்தியான மீசையுடன் வந்தார் பிரகாஷ் ராஜ். அவரை மீசையை எடுத்து விடுமாறு கூறியுள்ளார் இயக்குநர். இல்லாவிட்டால் கன்டியூனிட்டி கெட்டுப் போய் விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் மீசையை எடுக்க முடியாது என்று பிரகாஷ் ராஜ் மறுத்து விட்டார். இதனால் மறுபடியும் முட்டிக் கொண்டது.
இதையடுத்து பிரசாத், ஹைதராபாத் கோர்ட்டில் பிரகாஷ் ராஜ் மீது கேஸ் போட்டார். அதை விசாரித்த நீதிபதி, பிரகாஷ் ராஜைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸார் சென்னைக்கு வந்து பிரகாஷ் ராஜைக் கைது செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் பிரசாத் கூறுகையில், ஏற்கனவே ரகுவரன் நடித்த காட்சிகளை வெட்டி விட்டு புதிய நடிகரை வைத்து படமாக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் பிரகாஷ் ராஜும் இப்படி செய்தால் எனது நிலை என்னாவது என்று புலம்பினார்.
'உசுருக்காக' பிரச்சினை என்றால் பரவாயில்லை, இதுக்கெல்லாமா?


Click it and Unblock the Notifications











