ராஜ் மிரட்டல்-மன்னிப்பு கேட்ட ஜெயா பச்சன்

மும்பையில் நடந்த புதுப்படத் துவக்க விழாவில் பேசிய ஜெயா பச்சன், நாங்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்துள்ள குடும்பம். எங்களுக்கு இந்தி மட்டும்தான் பேசத் தெரியும். அதற்காக மராத்தியர்கள் தவறாக நினைக்கக் கூடாது. மற்றபடி எங்களை விமர்சிக்கும் ராஜ் தாக்கரே யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார்.
இதற்கு ராஜ் தாக்கரேவி்ன் மகாராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் நடித்த படங்கள், அவர்கள் தொடர்புள்ள விளம்பரப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே புறக்கணிக்க வேண்டும் என பகிரங்கமாக மிரட்டியது.
அதோடு நில்லாமல் மும்பை தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த அமிதாப்பின் தி லாஸ்ட் இயர் பட போஸ்டர்கள் மீது ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் தார் பூசியும், சாணி அடித்தும் எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிக்கையொன்றில் தனது நிபந்தனையற்ற மன்னிப்பைத் தெரிவித்துள்ளார் ஜெயா பச்சன்.
அவர் கூறியிருப்பதாவது:
நான் இந்தியில் பேசியது, மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வசிக்கும் மராத்தியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
துரோணா ஆடியோ விழாவில் நான் பேசியதா சிலர் தவறாக சித்தரித்துள்ளார்கள். நானும் இந்த மும்பையைச் சேர்ந்தவள்தானே... எங்களுக்கு எல்லாமும் தந்த இந்த நகரை என்னால் எப்படி அவமதிக்க முடியும்? என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











