மருத்துவக் காப்பீட்டில் அமெரிக்காவுக்கும் முன்னோடியாக திகழும் தமிழகம் – கமல்

உலக மலையாளிகள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டில் 60 குழந்தைகளுக்கும், பின்னர் தொடர்ந்து 100 குழந்தைகளுக்கும் என 164 பேருக்கு இருதய ஆபரேஷன்கள் நடந்துள்ளன.
அடுத்து சென்னையில் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்காக புதிய இல்லம் கட்டப்படுகிறது. இதற்காக நிதி திரட்ட தமிழ், மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்கும் நட்சத்திர கலைவிழா வருகிற 18-ந்தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தப்படுகிறது.
அவ்விழாவில் இருமாநில நடிகர்- நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நடிகர் கமல் ஹாசனும், உலக மலையாளிகள் சங்க நிர்வாகிகளும் வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கமல் ஹாஸன் கூறியதாவது:
நோய் அவதிகளில் இருந்து மக்கள் யாராக இருந்தாலும் காப்பாற்றப்பட வேண்டும். அந்த வகையில் தமிழக அரசு நிறைவேற்றி உள்ள உயிர்காப்பு திட்டம் மிகவும் பாராட்டதகுந்தது.
அமெரிக்காவில் இத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்தனர். அதற்கு முன்னோடியாக தமிழகத்தில் அது நிறைவேறி இருக்கிறது. நல்ல விஷயங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி பாராட்ட வேண்டும்.
சென்னையில் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட நடைபெறும் விழாவில் தமிழ், மலையாள படஉலகை சேர்ந்த எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்வார்கள்..." என்றார்.
பின்னர் நட்சத்திர கலைவிழாவுக்கான டிக்கெட் விற்பனையையும் தொடங்கி வைத்தார் கமல்.


Click it and Unblock the Notifications











