கோடம்பாக்கத்தில் ஓணம்!
தமிழ் சினிமா என்பது பெயருக்குத்தானே தவிர, கோடம்பாக்கத்தில் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை கலைஞர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்களே.
முன்னணி ஹீரோக்களே கூட பாதி மலையாளிகளாகவே உள்ளனர்.
நடிகைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீதம் கேரளத்து வரவுகள்தான் தமிழ் சினிமாவில் நிறைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு கேரளா சென்றுவிட்டனர். குறிப்பாக முன்னணி நடிகர்-நடிகைகள் அனைவரும் இன்று கேரளாவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.
இன்னும் சிலர் கோடம்பாக்கத்திலேயே ஓணம் கொண்டாடி வருகின்றனர்.
தனது ஓணம் கொண்டாட்டம் பற்றி அசின் கூறுகையில், "ஓணத்தை ஓணம் பண்டிகையை கொண்டாட ஜெய்ப்பூரில் நடந்த போல்பச்சன் படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தேன். இந்த பண்டிகையை பெற்றோருடன் சேர்ந்து கொண்டாடுவதுதான் எனக்கு இஷ்டம். உறவினர்கள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளேன். ஓணத்துக்காக பட்டு பாவாடை, சட்டை வாங்கி அணிந்தேன்.
வண்ணமயமான பூக்கோலங்கள் வாசலில் இடுவது இப்பண்டிகையின் ஸ்பெஷல். என் அம்மா ஓணம் பண்டிகையையொட்டி செய்யும் பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும். வாழை இலையில் விதவிதமான உணவுகள், மற்றும் பாயாசம் வைத்து கடவுளுக்கு படையலிட்டு விட்டு சாப்பிடும் இந்த நாள் மறக்க முடியாதது," என்றார்.
அமலா பால்:
ஓணம் பண்டிகையின் போது புதுவிதமான பூக்கோலம் போடுவது எனக்கு பிடித்த விஷயம். சிறுவயதில் இருந்தே இதை செய்கிறேன். கல்லூரியில் படித்த போது ஓணத்துக்கு பூக்கோலம் போடுவதில் தோழிகளுக்குள் போட்டியே நடக்கும். அது மறக்க முடியாத நினைவுகள். பெற்றோருடன் ஓணத்தை கொண்டாடுகிறேன் என்றார்.
பாவனா கூறும்போது, கன்னட படப்பிடிப்புக்காக கொழும்பில் இருப்பதால் ஊருக்கு போக முடியவில்லை. ஆனாலும் இங்கு படக்குழுவினருடன் அப்பண்டிகையை கொண்டாடினேன்," என்றார்.
நடிகை ஓவியா:
ஓணம் கொண்டாட்டம் இல்லாமல் எந்த ஆண்டும் பூர்த்தியாகாது. நான் பெற்றோருடன் இந்த ஆண்டு ஓணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில் உள்ள இனிமையே தனி.
அஜீத் - ஷாலினி
பிரபல நடிகர் அஜீத் தன் மனைவி ஷாலினி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் இன்று ஓணம் கொண்டாடினார்.
நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ஆகியோரும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள்.


Click it and Unblock the Notifications











