சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பூ, சுப்பிரமணியபுரம்

சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் துணைத் தலைவர் எஸ்வி சேகர் கூறியதாவது:
இந்த திரைப்பட விழா நடக்க தமிழக அரசு உதவி செய்துள்ளது. அதற்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி. டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த விழா தொடங்குகிறது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
இதுவரை நடந்த திரைப்பட விழாக்களை சற்று சிரமத்துடன்தான் ஏற்பாடு செய்தோம். ஆனால் இந்த முறை அரசு உதவி கிடைத்ததால் சற்று நிம்மதியாக ஏற்பாடு செய்துள்ளோம். இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற சூழல் நிலவ முயற்சி செய்வோம்.
மேலும் அடுத்த ஆண்டு முதல் திரைப்பட விழாவில் பங்கேற்கும் படங்களுக்கு விருதுகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் தங்கராஜ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
விழாவில் இடம்பெறும் திரைப் படங்கள் மற்றும் மற்றும் திரையிடப்படும் நேரம் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications











