ரஜினியின் பார்வை இந்திய அரசுக்கு வேண்டும்சீமான்

ரஜினியை காரசாரமாக எதிர்க்க வேண்டுமா.. கூப்பிடுங்கள் சீமானை என்றிருந்த நிலையில், குசேலன் பிரச்சினையின்போது, ரஜினிக்கு ஆதரவாகப் பேசி ஆச்சர்யப்பட வைத்தவர் இயக்குநர் சீமான்.
ஆனால் சில தினங்களில், கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டார் எனக் கூறி மீண்டும் ரஜினிக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை மேற்கொண்டார் சீமான்.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரதத்தில் ரஜினி பேசியதை பாராட்டியுள்ளதோடு, இந்தப் பார்வை இந்திய அரசுக்கும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
"இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத் தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும், என கமல் கூறியது சரியான வார்த்தை.
சர்வதேச ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், நீங்க ஆம்பிளைங்களா... உங்கள் தோல்வியை ஒத்துக்கோ... என ரஜினி கூறியதும் சரியானதே.
ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணர வேண்டும் என்பதே என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











