விவேக் கொடும்பாவியை எரிக்க பத்திரிக்கையாளர்கள் முயற்சி

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக நடிகர் சங்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய நடிகர்கள், நடிகைகள் படு ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நேற்று சென்னையில் குழுமிய பத்திரிக்கையாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிக இழிவாக, ஆபாசமாக பேசிய நடிகர்கள் விவேக், சத்யராஜ், விஜயக்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். லெனினை பெண்கள் வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைப் போல இவர்களையும் அதே சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையர் ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென முதல்வர் கருணாநிதியை நடிகர் விவேக் சென்று சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இன்று மாலை சென்னை பிரஸ் கிளப்பில் கூடிய பத்திரிக்கையாளர்கள் நடிகர் விவேக்கின் கொடும்பாவியை எரிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் பெருமளவிலான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். திருவல்லிக்கேணி துணை ஆணையரும் அங்கு விரைந்து வந்தார்.
பத்திரிக்கையாளர்களுடன் அவர்கள் நீண்ட நேரம் பேசினர். இதையடுத்து கொடும்பாவி எரிப்பு திட்டத்தை பத்திரிக்கையாளர்கள் கைவிட்டனர்.


Click it and Unblock the Notifications











